பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்

கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 1:-

ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...


அச்சுறுத்த வேண்டா:-
"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.

தமிழில்,

"எழுத்தெனப் படுவ

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப...''*

என்றார் தொல்காப்பியர்.

ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.
கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.

அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.
என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.

தமிழ் இயற்கை மொழி:-
மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.

எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?'' என்போமன்றோ? வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "". சற்று அதிகம் திறந்தால் "" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு - உச்சரிப்பு:-
இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.
நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.
தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.

தமிழ் என்னும் சொல்லில், -வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.

தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.
தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.

"தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று , , மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.

நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.

இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:-
தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.

அதனால், "சார் இங்கே என்ன ""னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.

பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.

மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் ""கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் ""கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி ""கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:-

தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);

தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);

வால் - தூய்மை (வெண்மை)

வாலறிவன், வாலெயிறு;

வாள் - வெட்டும் கருவி,

வாழ் - வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்