பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 13:-



ஞாயிறுதோறும்:-
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாகும் என்பதை 'ஞாயிறுதோறும் விடுமுறை' என்று அறிவிப்பார்கள். இது சரிதான். ஆனால் சில இடங்களில் 'ஒவ்வொரு ஞாயிறு தோறும் விடுமுறை' என்று எழுதியுள்ளார்களே! 'தோறும்' எனும் சொல் ஒவ்வொரு எனும் பொருளையே தருவதால்,​​ இப்படி இரு சொற்களை ஒரு பொருள் குறிக்கப் பயன்படுத்துதல் வேண்டா.

இதுபோலவே 'பணமாகவோ அல்லது காசோலையாகவோ' தரலாம் என்று சில அறிவிப்புகளைக் காண நேர்கிறது. 'ஓ' என்பது இங்கு அல்லது எனும் பொருளில் வரும் போது,​​ இரண்டையும் ஏன் சேர்க்க வேண்டும்? 'பணம் அல்லது காசோலை' தரலாம்,​​ பணமாகவோ காசோலையாக என்றோ ஒன்றை மட்டும் குறித்தல் நன்று.

நினைவுகூறுதல்:​​-
'நம் தலைருடைய பணிகளைப் - புகழை நாம் என்றென்றும் நினைவு கூறுதல் வேண்டும்' என்று எழுதுகிறார்கள். கூறுதல் என்றால் சொல்லுதல் எனும் பொருள்தரும் என்றறிவோம்.
கூர்தல் என்றால் மிகுத்தல்.
அன்பு கூர்தல் என்றால் அன்பு மிகுத்து (மிக்க அன்பு கொண்டு) என்று பொருள்.
ஒருவர் புகழை,​​ அவர்தம் பணிகளை நினைவு கூர்தல் என்றால்,​​ மிகவும் நினைத்தல் (நிரம்ப நினைத்தல்) என்று பொருள்.
ஆதலின் தலைவருடைய புகழை நாம் என்றும் நினைவு கூர்தல் வேண்டும் என்றெழுதுவதே சரியாகும். முன்னரே இதுபோலவே,​​ உளமார,​​ அளப்பரிய என்பவற்றை உளமாற,​​ அளப்பறிய என்றெழுதுவது பிழை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இந்த 'ர'கர 'ற'கரம் பற்றி என்னும்போது,​​ பல ஆண்டுகள் முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பில் இரண்டு திரைப்படங்களின் பெயர்கள் தவறாக எழுதிக்காட்டப்பட்டன.

1. பெருமைக்குறியவள் (பெருமைக்கு உரியவளை) - பெருமைக் குறியவள் என்றெழுதி மிகத் தவறான ஒரு பொருள்தோன்றச் செய்துவிட்டார்கள்.

2.கொம்பேரி மூக்கன் - கொம்பில் ஏறுகின்ற ஒருவகைப் பாம்பின் பெயரை கொம்பேறி மூக்கன் என்றெழுதிடாமல்,​​ கொம்பேரி மூக்கன் என்றெழுதிக் காட்டினார்கள்.
ஏரி (நீர்நிலை) இங்கு எப்படி வந்தது?
ஏன் வந்தது?
எழுதுபவர் மொழியறிவு இல்லாதவர் என்றால்,​​ எழுதிய பின் அறிந்த ஒருவர் மேற்பார்வையிட்டுத் திருத்தியிருக்க வேண்டாவா?

இப்போதும் ஏடுகளில் பார்க்கிறோம்.
'வரட்சி நிவாரண நிதி' என்று வருகிறது.
இது வறட்சி நிவாரண நிதி என்றிருக்க வேண்டும்.
வறள்,​​ வறட்சி என்பன சரியான சொற்கள்.

ஒருவர் மீது கொண்ட அல்லது ஒரு செயலில் கொண்ட முழுமையான ஈடுபாட்டை அக்கறை எனல் வேண்டும். இப்போதும் சிலர் இதனை "அக்கரை" என்றெழுதுகிறார்கள். அந்தக் கரை (ஆற்றங்கரை) அன்று இது. மொழி மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.

கண்டவை - கேட்டவை:-
திருக்கோவில்ளில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி சன்னதி என்று முன்னாட்களில் எழுதி வந்தனர். பின்னர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி சன்னதி என்று எழுதினார்கள். "ஸ்ரீ" யை விட்டு "அருள்மிகு" எனும் பொருள் பொதிந்த நற்றமிழ் அடைமொழியைச் சேர்த்தது நன்று. ஆனால், இந்நாளில் சில திருக்கோவில்களில் அருள்மிகு என்பதைச் சுருக்கி "அ/மி" மருந்தீசுவரர் என்பது போல எழுதியிருப்பதைப் பல இடங்களில் காண நேர்கிறது. "மே/பா" (c/o)போடுவது போல தெய்வப் பெயர்களை இப்படி இழிவு செய்யலாமா?
அடுத்தது "சன்னதி" என்ற சொல். இது "சந்நதி" என்று இருத்தல் வேண்டும். சந்நிதானம் என்னும் போது இவ்வாறே கொள்க.
சில அகராதிகளில் "சன்னிதி" என்றும் காணப்படுகிறது. எப்படியாயினும் சன்னதி என்பது பிழையே.

அருள்மிகு "வினா"யகர் திருக்கோவில் எனப் பல இடங்களில் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.
வி + நாயகர் = விநாயகர் எனில் மேலான தலைவர்.
பூதி - சாம்பல்,​​ விபூதி - மேலான சாம்பல் (திருநீறு) தமக்கு மேல் ஒரு தலைவரற்றவர் விநாயகர். மூல முதல் என்று போற்றப்படுபவர். அவரின் பெயரை வினாவுக்கு உரியவராகச் சிதைக்கலாமா? திருத்துவீர்களா?

இந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டது என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரையின் அடிப்பாகத்தில் எழுத்தில் காட்டுகிறார்கள்.
இது சித்திரிக்கப்பட்டது என்றிருத்தல் வேண்டும். சித்திரம் என்பது சொல். இதிலிருந்து வருவதே சித்திரிக்கப்பட்டது எனும் தொடர்.
சித்திரத்தைச் சித்தரம் ஆக்கலாமா?

ஓர் இசையரங்கில் ஒருவர் பாடுகின்றார். விநாயகர் வாழ்த்து அது.
நந்தி மகன்தனை,​​ ஞானக்கொழுந்தனை என்று இசைக்கிறார்.
ஞானத்தின் கொழுந்தாக இருப்பவனை- ஞானக் கொழுந்தினை அந்த இசைஞர் கொழுந்தன் ஆக்கிவிட்டார். கணவன் உடன் பிறந்தான் கொழுந்தன் எனப்படுவான். இப்படித் தமிழைச் சிதைக்கலாமா?
எண்ணுங்கள்.

மொழிப் பயிற்சி - 14:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 14:-

மரபுவழிப்பட்ட செவிகளில் உறுத்தலாக ஏதாவது ஒலி கேட்டால் மனம் வருந்துகிறது. கூடியிருந்தனர் என்பதில் "அர்" ஒலியை முழுமையாக ஒலிக்காமல் "ன" உடன் முடிப்பவர் பற்றி முன்னர் எழுதியுள்ளோம். வேறு சிலர் அரை மாத்திரையில் ஒலிக்க வேண்டிய குற்றியலுகர ஒலியை முழு மாத்திரையளவு ஒலித்து குற்றியலுகரம் எனும் இலக்கணத்திற்குப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் (த் + உ) உகரம் முழுமையாக ஒலிக்காது. ஆனால் சிலர் இந்த உகரத்தை அழுத்தி தூஉ என அளபெடையிட்டு ஒலிக்கிறார்களே (செய்திகளைப் படிப்பவர்கள் சிந்திப்பார்களா?)

பேச்சாளர் சிலர் அறிஞ்சர், கலைஞ்சர் என்றோ, அறிநர், கலைநர் என்றோ உச்சரித்துப் பேசுகிறார்கள். காதில் வந்து தேள் கொட்டுவதுபோல் இருக்கும் அந்த நேரங்களில். சற்றே முயற்சி செய்தால் சரியாக உச்சரிக்க முடியும்.
முயற்சி செய்வார்களா?

- (P) பம்பரத்தை (B) பம்பரம் என்றும்
- (k) குடிசையை (g) குடிசை என்றும்
- (k) கும்பல் (g) கும்பல் என்றும்
- (Poo) பூம்புகாரை (boo) பூம்புகார் என்றும்
மிகப்பலர் குறிப்பாகச் சென்னையில் வாழ்வோர் ஒலிக்கிறார்கள்.

போல இருக்கும் (po) போலியை (bo) போலி என்றும், வேறொன்றும் இல்லாது காற்று (கால்) உள்ள இடத்தைக் காலி (ka) என்று சொல்லாமல் காலி (ga) என்பதும் கேட்கப் பொறுக்கவில்லை. உன்னால் (ba) பயனில்லை என்று பேசுவதைக் கேட்கும்போது நாம் என்ன எழுதி என்ன (pa) பயன் என்று எண்ணத் தோன்றுகிறது.

மரியாதை அடைமொழிகள்:-
மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபாதேவி பாட்டீல், மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி - இவ்வெடுத்துக்காட்டுகள் மூன்றும் பிழையற்ற வாக்கிய அமைப்பை உடையவை.

இவ்வமைப்பைச் சற்றே மாற்றி இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு பிரதிபாதேவி பாட்டீல், தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி என்றெழுதினால் இவை பொருட்பிழை கொண்ட வாக்கியங்களாகும்.
- மேதகு எனில் "மேன்மை தங்கிய" என்று பொருள்.
- மாண்புமிகு எனில் மாட்சிமை மிகுந்த என்பது பொருள்.
ஆங்கில மொழியின் தாக்கத்தால் தமிழில் உருவாக்கப்பட்ட நல்ல தமிழ்ச் சொற்கள் இவை. கனம், மகாகனம் போன்ற சொற்கள் நாம் பயன்படுத்திய வட சொற்கள். இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அவற்றைத் தாங்குகின்ற பதவிப்பொறுப்புகளுக்கேயன்றி, பொறுப்புகளை ஏற்றுள்ள ஆள் (நபர்)களுக்கு அல்ல. பதவிப் பொறுப்புகள் பறிபோகுமானால் அடைமொழிகளும் போய்விடும்.
ஆதலின் மாண்புமிகு, மேதகு போன்ற ஆட்சிசார்ந்த அடைமொழிகளை ஒருவர் பெயரோடு சேர்த்து எழுதுகின்ற, பேசுகின்ற முறையை விட்டுவிடுக.கீர்த்தி எனில் புகழ். கீர்த்தி எனும் வடசொல்லுக்கு நிகரான தூய தமிழ்ச் சொல் சீர்த்தி. உயர்ந்த பெருமைகளுக்கு உரியவரைப் பாராட்ட சீர்த்திமிகு எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம்.

மிக்க புகழும், பெருமையும் உடைவர்களைப் பாராட்ட உயர்சீர்த்தி எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம். இச்சொல் சங்க இலக்கியத்துள் காணப்படும் பழந்தமிழ்ச் சொல்.துறவுநிலையில் மேன்மையுற்ற ஆதினங்கள், திருமடங்களின் தலைவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ-ல-ஸ்ரீ என்று முன்னர் எழுதி வந்தோம். இப்போது நல்ல தமிழில் தவத்திரு என்றோ சீர்வளர் சீர் என்றோ சொல்லி வருகிறோம். தவத்திரு என்பதில் தவம் - தவநிலையைக் குறிப்பதோடு "தவ" என்னும் உரிச்சொல்லாக நின்று மிகுந்த எனும் பொருளையும் காண்க.

கிறித்துவப் பாதிரியார்கள் பெயர்களின் முன்னே அருள்திரு என்றோ அருள்தந்தை என்றோ அடைமொழி சேர்க்கப்பட்டு வருகிறது. சிலர் இவற்றை எழுதும்போது அருட்திரு என்றும், அருட்தந்தை என்றும் எழுதுகிறார்கள். நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.

(எ-டு)
- பல் +பொடி= பற்பொடி
- முள் + செடி= முட்செடி

ஆனால் வருமொழி முதலில் தகரம் (த)வரின் அதுவும் றகர, டகரமாக மாறும் என்பது நுணுக்கமான ஒன்று.
(எ-டு)
- புல் + தரை = புற்றரை
- வாள் +தடங்கண் = வாட்டடங்கண்

மிகவும் கடினமாகப் போவதுபோல் தோன்றுகிறதா? சற்றே மனம் செலுத்துங்கள். எளிதில் புரியும்.

என்ன சொல்கிறோம் என்றால் அருட்தந்தை, அருட்திரு என எழுதுதல் பிழையாம். பின்? அருட்டந்தை, அருட்டிரு என எழுதுதல் பிழையற்றதாம்.

எதற்கு வம்பு என்று எண்ணினால் இயல்பாக அருள்தந்தை, அருள்திரு என்று எழுதிவிடுங்கள். இதில் பிழையில்லை.

மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

கவிக்கோ ஞானச்செல்வன்


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 15:-

நாள்களா? நாட்களா?
நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை.
ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு "கள்' என்பது சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. "கள்' என்பது பெயர்ச் சொல்லாயின் மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் "சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?

பவழமா? பவளமா?
தமிழில் "ழ' கரம் தனிச்சிறப்புடைய ஒலி. அதனால் இதற்குச் சிறப்பு ழகரம் என்று பெயர். தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் இவ்வெழுத்தை ஒலி மாறாமல் உச்சரிக்க முடியாது. தமிழர் எவரும் ழகரத்தைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது என்று முன்னரே நாம் வலியுறுத்தியுள்ளோம். சரி... அதற்கென்ன இப்போது?
பவழம் என்றாலும் பவளம் என்றாலும் பொருள் ஒன்றே. பவழம் என்று உச்சரிக்கத் தெரியாதவர்கள்- உச்சரிக்க முடியாதவர்கள் பவளம் என்று பிழையாக ஒலிக்கிறார்கள் என்று ழகரப் பற்றுக் காரணமாக உரைப்பார் உளர். அவர்களின் கருத்துப் பிழையானது. தமிழில் எந்த அகரமுதலியை (அகராதியை) எடுத்துப் பார்த்தாலும் பவழம்- பவளம் என்றுதான் போட்டிருக்கிறார்கள். பவளம்- பவழம் என்று எழுதியிருப்பதோடு ஒன்பான் மணிகளுள் (நவரத்தினங்களுள்) ஒன்று என்றும் எழுதியிருக்கிறார்கள். "மணிமிடைப்பவளம்', "பவளக் கூர்வாய் செங்கால் நாராய்' போன்ற பழந்தமிழ்த் தொடர்களைச் சான்றாகக் கொள்க. "பவழத்தன்ன மேனி ' எனும் தொடரும் பழந்தமிழில் உண்டு. ஆதலின் பவழம், பவளம் இரண்டும் ஒன்றே.
ஆதலின் எழுபத்தைந்தாம் அகவை நிறைவு கொண்டாடுபவர்கள் பவள விழா அழைப்பிதழ் என்று அச்சடித்திருந்தால், அவர்கள் மீது சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ் அறியாதவர்கள் என்று வெற்றுரையும் வீச வேண்டாம்.

இழிவு- இளிவு இரண்டும் ஒன்றா?
இழிவு என்பதில் சிறப்பு ழகரம். இளிவு என்பதில் பொது ளகரம். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இரு சொற்களையும் காணலாம். தமிழில் ஆழமாக எதுவும் அறியாமல், ழ மீது கொண்ட மிகையார்வம் காரணமாக, இளிவை இழிவு என்று திருக்குறளிலும் மாற்றிவிட்டார்கள் என்று திருக்குறள் பதிப்பாசிரியர்கள் மீது, ஏன்... திருவள்ளுவர் மீதே குற்றம் சாட்டுகிறவர் உண்டு.

இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அது தாழ்வு அல்லது கீழான எனும் பொருளாகும். ஆனால் இரு சொற்களுக்குமிடையே நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. இழிதல் என்றால் இறங்குதல். மலையிலிருந்து அருவி கீழே இறங்கினால், "இழி தரும் அருவி' என்றனர். தலையின் இழிந்த மயிரனையர் என்றார் திருவள்ளுவர். தலையிலிருந்து கீழே இறங்கிய (கொட்டிய) மயிர் என்பது உவமை. அதற்கு என்ன மரியாதை உண்டு?அதுபோலவே தம் நிலையிலிருந்து கீழே இறங்கியவரும் (தாழ்ந்தவரும்) ஆவார் என்பது பொருள்.

ஆனால் இளிவு வேறு. எண் சுவையுடன் சாந்தம் என்று ஒன்று கூட்டி நவரசம் என்பர் வட நூலார். தொல்காப்பியம் உரைக்கும் மெய்ப்பாடுகள் எட்டுள் இளிவரல் என்பதும் ஒன்று. "நகையே அழுகை இளிவரல் மருட்கை' என்று அந்த நூற்பா தொடங்குகிறது. இந்த இளிவரல்தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், "இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும் மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு.

திருக்குறளில் வரும் இளிவு எனும் சொல்லை எடுத்துவிட்டு, இழிவு என்னும் சொல்லைச் சேர்த்திட நாம் யார்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது? திருக்குறளில் கைவைக்கும் அளவுக்கு நாம் பேரறிவாளரா? என்று சிந்திக்க வேண்டும், இப்படியொரு சிந்தனையைக் கிளப்பியவர்கள்.

மொழிப் பயிற்சி -16:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 16:-

பொருத்து - பொறுத்து:- ஒரு விளக்கம்

பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல்.
"செய்" என்னேவல் வினை முற்று என்பர் இலக்கணப் புலவர்.
பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும். நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும். இந்த எடுத்துக்காட்டில் பொறுத்து எனும் சொல் உயரும் என்ற சொல் கொண்டு முடிந்தது.
என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம்.
என்னைப் பொருத்தவரையில் என்றெழுதினால் என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) வரையில் (அளவில்) வாக்கியம் சரியாக எப்பொருளும் தராமல் சிதறிப் போகிறது.

கருநாடகச் சட்டப் பேரவைப் பெரும்பான்மை பற்றிய முடிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். இந்தச் சொற்றொடர் தெளிவாக இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாங்கி அல்லது ஏற்று முடிவு காணப்படும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தே என்றால் தீர்ப்பைப் பொருத்து - சேர்த்துவிடு என்று ஏவல் முடியும் சொல்லில் "ஏகாரம்" பொருத்தே எப்படிப்பொருந்தும்?

பொருப்பு எனும் சொல்லுக்குப் பக்கமலை அல்லது மலை என்று பொருள்.
பொறுப்பு எனில் கட்டாயக் கடமை (உத்திரவாதம்).
இந்தச் செயலுக்கு யார் பொறுப்பு?
இந்த நிலையத்தின் பொறுப்பாளர் யார்? போன்ற தொடர்களை நோக்குக.

- பொறை - பொறுமை;
- பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க)

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை".
நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு.

நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளிவிட முடியாது. அதனையும் தாங்கித் தன் பெரும்பான்மை பற்றி முடிவு செய்யப்படும் என்றால் இதில் என்ன பிழையிருக்கிறது ஐயா?

உறவும், உடைமையும் நமக்கு உறவாக இருப்பவர்கள் நம் குடும்பத்தார், சுற்றத்தார் இவர்களைச் சுட்டிச் சொல்லும்போது எப்படிச் சொல்லுவது? எழுதுவது? வழக்கமாக, எனது மைத்துனர், எனது தம்பி, எனது மாமா என்று எழுதுகிறார்கள். இப்படி எழுதுதல் பிழை.

திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது மகள் என்று குறிப்பிடுவார்கள். என் மகள், என் மகன் என்றே குறிப்பிட வேண்டும்.
அல்லது எனக்கு மகன், எனக்கு மகள் என இலக்கணத்தோடு இயம்பலாம். எனது புத்தகம், எனது வீடு, எனது நிலம் என்று உடைமைப் பொருள்களைச் சுட்டலாம். உறவுப் பெயர்களைச் சுட்டுதல் பிழை.

திருமண அழைப்புகளில் மற்றொரு பிழை வழக்கமாக அச்சேறி வருகிறது. திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்று கூடாத இடத்தில் ஒரு "ச்" சேர்த்துவிடுகிறார்கள். திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்று வினைத் தொகையாக (திருவளர்ந்த, வளருகின்ற, வளரும்) எழுதுவதே சரி.

பிழையும், திருத்தமும் நூல்கள் அச்சிட்டு முடித்தபின் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள்.

ஊர்ப் பெயர்களில் ஏற்பட்டுவிட்ட பிழைகள் பற்றி ஒரு பட்டியல் முன்னரே கொடுத்துள்ளோம். விட்டுப்போன ஊர்கள் சில பற்றி நினைவு வந்தது.

திருவொற்றியூர்:-
சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்த திருத்தலம், சுந்தரர் வரலாற்றில் இடம் பெற்றது. இத்தலத்து ஈசனை "வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம்" எனச் சுந்தரர் பாடி உருகினார். திரு ஒற்றியூர் என்பதைத் திருவெற்றியூர் என்று கற்றவர்களும், ஊடகச் செய்தியாளரும் சொல்லும்போது மனம் வருந்துகிறது.

மயில் தொடர்புடைய தலபுராணம் கொண்ட மயிலாப்பூரும் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணுருவாக்கிய இடம் இது. மயிலா என்பதை மைலா ஆக்கிவிட்டார்கள். மைலாப்பூர் என்று எழுதுவது பெருந்தவறு.
மயிலாப்பூர் என்னும்போது ஒலிக்கின்ற மயில் - மைலாப்பூர் என்னும்போது ஒளிந்து கொண்டதே.

பூந்தமல்லி:-
பூந்தமல்லி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஊரினைக் கற்றவர்கள் பூவிருந்தவல்லி என்று திருத்தமாகச் சொல்லுவதாக எண்ணி மாற்றியுள்ளார்கள். வல்லி எனில் கொடி. பூக்கள் நிரம்பப் பூத்திருந்த கொடி என்று விளக்கம் சொல்லுவார்கள். பூந்தண்மலி - பூக்களின் தண்மை (குளிர்ச்சி) மலிந்திருக்கும் (நிறைந்திருக்கும்) ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.

மொழிப் பயிற்சி -17:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 17:-

அமஞ்சிக்கரை என்ற ஊரைத் திருத்தமாகச் சொல்லுபவர்கள் அமைந்தகரை என்று குறிப்பார்கள். கரை என்பது ஆற்றுக்கோ, குளத்திற்கோ மக்களால் அமைக்கப்படுவது. தானாகக் கரை அமையுமா? அமைந்தகரையோ, அமைக்கப்பட்ட கரையோ எதுவும் அங்கில்லை. அமஞ்சி எனும் சொல் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இந்நாளில் இலவசம் என்று சொல்வதற்கு நிகரான சொல் இது. கரை என்பது சிற்றூர்ப் பகுதிகளையும் குறிப்பதுண்டு. யாரோ ஒரு வள்ளலால் பணம் பெறாமல் அமஞ்சியாகத் தரப்பட்ட இடமே இது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓர், ஒரு - சிறிய விளக்கம்:-
ஆங்கிலத்தில் a, e, i, o, u என்னும் ஐந்தும் உயிரெழுத்துகள் எனக் கொண்டு,இவ்வெழுத்துகளுள் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஒன்று என்பதைக் குறிக்க ஹய் என்று எழுத வேண்டும் (an apple). a போடக்கூடாது என்ற விதி சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். நம் தாய்த் தமிழிலும் இப்படி ஒரு விதியிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இவ்விதியைக் கடைப்பிடித்து எழுதுகிறார்கள்?

தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும்.
- ஓர் அணில்
- ஓர் இரவு
- ஓர் உலகம்
- ஓர் ஏடு
- ஓர் ஐயம்
என்று காண்க.

உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும்.
(எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.

இம்முறையை மாற்றி ஓர் வீட்டில் ஒரு அம்மா இருந்தாள் என்று எழுதுவது பிழை. நூலெழுதுவோர், பத்திரிகையாளர் பலரும் இப்பிழையைப் பொருட்படுத்துவதில்லை. தம்போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் போக்கை. ஈண்டு இன்னொரு குறிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அஃறிணைப் பெயர்களோடு மட்டுமே இந்த ஓர், ஒரு (மற்றும் எண்கள் எவையும்) இணைத்தல் வேண்டும். உயர் திணையில் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. என்ன?விளங்கவில்லையா?
ஒரு பேராசிரியர் எனல் தவறு, பேராசிரியர் ஒருவர் எனல் சரி.
மூன்று பெண்கள் எனல் தவறு. பெண்கள் மூவர் எனல் சரி.
பஞ்சபாண்டவர் என்பது வழக்கிலிருப்பினும் பாண்டவர் ஐவர் நூற்றுவர் கன்னர் (சிலம்பு) என்பதே தமிழ் மரபு.

கிருட்டிணமூர்த்தி என்றெழுதல் சரியா? இப்படி எழுதுவது பிழையாகும். கிருஷ்ணமூர்த்தி எனும் வடமொழிப் பெயரில் உள்ள "ஷ்" என்ற எழுத்தை நீக்கிவிட்டு கிருட்டிண என்று எழுதுகிறார்கள்.
கிருட்டி என்று ஒலித்த பின் அதனோடு ணகரம் இணைத்துக் கிருட்டிண என்றொலிப்பதற்குப் பெரும் முயற்சி வேண்டியுள்ளது.
கிருட்டினமூர்த்தி என்று டண்ணகரத்திற்குப் பதில் றன்னகரம் போட்டு ஒலித்துப் பாருங்கள். இயல்பாக இனிமையாகச் சொல்ல வரும்.
தமிழ்மொழி ஒலியியல் பற்றியும் அறிந்தவர்கள் இதனை நன்கறிவர். இதற்கு வலுவூட்ட வேறொரு சொல்லை நாம் பார்க்க வேண்டும்.

நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். இங்கு பட்டினம் என்று "டி"யுடன் "ன" சேர்வதையும் பட்டணம் என்று "ட"வுடன் சேர்வதையும் கருதுக. ஆதலின் கிருட்டினமூர்த்தி என்றெழுதுவதே சரியானது.

சரி, இப்பெயரைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் என்னவாம்?
கறுப்புக் கடவுள் என்பதாம். கிருஷ்ணம் என்றால் கறுப்பு. மூர்த்தி - கடவுள். தேய்பிறைக் காலத்தை கிருஷ்ணபட்சம் என்பதன் பொருள் புரிகிறதா?

இன்னும் மனம் இசைவு பெறவில்லையா?
கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண - கருமை; வேணி- சடை) மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

கரியநிறம், கருமை நிறம் என்றெல்லாம் இடையினம் வரினும் கறுப்பு எனும்போது வல்லினமே இட வேண்டும். யாழ்ப்பாணம் பெரும்புலவர் நா.கதிரைவேல் பிள்ளை பேரகராதியிலிருந்து, கழகத் தமிழ்க் கையகராதி வரை எதில் வேண்டுமாயினும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

"கறுப்பும், சிவப்பும் வெகுளிப் பொருள"எனும் தொல்காப்பியச் சூத்திரம் நாமும் அறிவோம்.
ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது இயல்பே.
கறுப்பு - கரிய நிறம், சினம், வஞ்சனை என்று அகர முதலிகளில் காண்க.

மொழிப் பயிற்சி -18:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 18:-


அ, இ, உ சேர்க்கும் முறைமை:-
தமிழில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வரலாம். ஆனால் உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் "ங" மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது.

"ஞ" எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது, ராமன், லட்சுமணன், ரங்கநாயகி, லோகநாதன் போன்ற பெயர்களைப் பற்றித்தான். இவை போன்ற வடமொழிப் பெயர்களாயிரம் தமிழில் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருபவை. "ல,ள, ர, ற" இப்படியான எழுத்துகள் மொழி முதலில் வாரா. பின் எப்படி இவற்றை எழுதுவது?

முன்னரே நாம் அறிந்து கடைப்பிடிக்கும் முறைதான். மீண்டும் நினைவூட்டுகிறேன். இத்தகைய பெயர்களின் முன்னெழுத்தாக அ, இ, உ ஆகியவற்றை இடமறிந்து, பொருத்தமறிந்து இணைத்து இச்சொற்களை எழுத வேண்டும்.

(எ-டு) இராமன் (இ), இலட்சுமணன் (இ), அரங்கநாயகி (அ), உலகநாதன்(உ). இப்படிப் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும்.

இலட்சுமணன் என்ற பெயரைத் தமிழ் ஒலிப்படுத்தி இலக்குவன் என்றே கம்பர் எழுதினார். லட்சுமணன் என்ற பெயரை அலட்சுமணன் ஆக்கிவிடக்கூடாது.

ரங்கசாமி என்ற பெயரை அரங்கசாமி என்றெழுதிட வேண்டும். இரங்கசாமி ஆக்கிவிடக்கூடாது.

ஸ்ரீ ரங்கம் - திருவரங்கம்.
உலகநாயகி என்ற பெயரை அலகநாயகி என்றோ, இலக நாயகி என்றோ ஆக்கிடல் ஆகாது. பெரும்பாலும் நம் மக்கள் பயன்பாட்டுத் தமிழில் சரியாகவே காண்கிறேன். சிலர் ஏனோ இரங்கசாமி என்று எழுதி வருகிறார்கள். இராமசாமியை யாரும் அராமசாமி என்று இதுவரை ஆக்கவில்லை.

இறும்பூதும், இறுமாப்பும்:-
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப்பூ எனப் பல பொருள் உண்டு. "உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்'' என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும்.

இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.

அரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம்.

இறுமாப்பு - பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற்கையே. இவ்விரு சொற்களும் தக்கவாறு இன்றும் பயன்படுத்தப்படுமானால் தமிழுக்கு ஆக்கமாம்.

கோவிலா? கோயிலா?
தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது.
நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் "ய், வ்" என்றிரண்டு.

கோ (க் + ஓ) இல் (இ) கோ என்பதில் "ஓ" எனும் உயிரும், இல்லில் "இ" எனும் உயிரும் இணையுமிடத்தில் "வ்" எனும் மெய்யெழுத்து தோன்றும்.
ஆதலின் கோ + வ் + இல் = கோவில் என்பதே சரியானது.

கோயில் என்னும்போது கோ + ய் + இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், "இ, ஈ, ஐ" வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் "ஏ" முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்."

கோவில் ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும்.
ஆயினும், மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது.
இது ஏற்கத்தக்க பிழையே.

மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.)
தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது.)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "வ்" உடன்படு மெய் வந்தது)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "ய்" உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது.
போதும் எனக் கருதுகிறோம். இலக்கணம், படிப்பவர்க்குச் சுமை ஆகிவிடாமல் சுவை பயத்தல் வேண்டும் எனும் நோக்கில்தான் எழுதிவருகிறோம்.

மொழிப் பயிற்சி -19:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 19:-


ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா?
"இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?"
இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன?
மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு?
ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி?
மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ?
ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
ஏனிந்தப் பிழைகள்?

வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு.
வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர்.
வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே.
அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது.
வழிபாட்டை - வழிப்பாட்டு ஆக்க வேண்டா.

தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் "நாநிலம்" என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை "நானிலம்" எனல் வேண்டும்.
நான்கு+ நிலம்= நானிலம்.

இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள்.
தன் + நலம் = தன்னலம் என்றாகும்.
தம் + நலம் = தந்நலம் என்றாகும்.
இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது.

இவ்வாறே,
- என்+ தன் = என்றன் எனவும்,
- எம்+ தம் = எந்தம் எனவும்
ஆகுதல் இலக்கணம்.
எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.

தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா?
இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல்,
- தேசியம்
- காந்தியம்
- ஆன்மிகம்
என்றே எழுதிடல் வேண்டும்.

இஸம் - தமிழில் இயம் என்றாகும்.
மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும்.
தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.

தன்வினை செய்வினையா?
திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்:-
"ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''
இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை.

மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா?
தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?

செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும்.
பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே.
சற்றே விளக்கமாக அறிவோமா?

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம்.
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.

இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம்.
இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம்.

செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும்.
ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது என்ற துணைவினை சேர்கிறது.
எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது.
ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.

தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது "வி, பி" என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.
திருமுழுக்குச் செய்வித்தனர்.
- செய்தனர் - தன்வினை
- செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)

பாடம் படிப்பித்தனர்.
- படித்தனர் - தன்வினை
- படிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)

செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது.
ஆனால், தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும்,
- திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.

- இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை,
- இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.

மொழிப் பயிற்சி - 20:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்



பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)


மொழிப்பயிற்சி - 20:-

தன்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் பிறவினை வாக்கியமாக மாற்ற முடியாது. ஆனால் செய்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் செயப்பாட்டு வினையாக மாற்ற முடியும். இந்த வேறுபாட்டின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இவ்விலக்கணக் குழப்பங்கள் ஏற்படாது.

மாரனும், மாறனும்:-
- மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும்.
- மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும்.
முன்னது வடசொல்.
பின்னது தமிழ்ச்சொல்.

மன்மதனுக்குத் தனித் தமிழ்ச் சொல் "வேள்" என்பது. வேட்கையை உண்டாக்குபவர் என்பது பொருள்.
மன்மதன் கருநிறம் கொண்டவன். சிவந்த நிறமுடைய "வேள் செவ்வேள்" எனும் முருகப் பெருமான் ஆவான்.

சுகுமாரன் என்பது "அழகிய மன்மதன்" என்னும் பொருள் கொண்ட வடசொல். இதனைச் சிலர் சுகுமாறன் என்றெழுதுகிறார்கள். இது சரிதானா?
- திருமாறன்
- நெடுமாறன்
- நன்மாறன்
இப்பெயர்கள் எல்லாம் தனித்தமிழ்ப் பெயர்கள்.
இந்தப் பெயர்களில் உள்ள மாறன் (பாண்டியன்) எனும் தமிழ்ப் பெயரை "சுகு" என்ற வடசொல்லோடு ஒட்டலாமா?
அது சுகுமாரன் என்றே எழுதப்பட வேண்டும். சுகுமாறன் என்று இருமொழியும் இணைத்துப் பொருளற்றதாக ஆக்கிவிடுதல் பிழை.

வள்ளி - வல்லி எது சரி?
இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்ட தமிழ்ப் பெயர்களே.
முருகன் காதல் மணம் செய்து கொண்ட குறமகள் வள்ளி.
வள்ளிக் கிழங்கு என்றொரு கிழங்கு உண்டு. அக்கிழங்கைத் தோண்டி எடுத்த பின் இருந்த குழியில் கிடந்தவள் குழந்தை வள்ளி.
இன்றும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு பயன்பாட்டில் உள்ளன.
வள்ளி தமிழ்ப் பெயரே.
வல்லி எனின் கொடி என்பது பொருள். வல்லிக் கொடி என்று (ஒரு பொருட் பன்மையாக) இணைத்தும் சொல்லுவதுண்டு.
- இன்பவல்லி
- அமுதவல்லி
- மரகத வல்லி
எனும் பெயர்களில் பெண்கள் கொடி போன்றவர் எனும் மென்மை பற்றிய குறிப்பை அறிக.
ஆகவே, வள்ளி, தெய்வயானை பற்றிக் குறிக்கும் இடங்களில் மட்டுமே வள்ளி வர வேண்டும்.
பிறவாறு பெண் பெயர்களில் வல்லி வர வேண்டும். இவற்றை மாற்றிச் சேர்ப்பது சரியாகாது.

கைமாறு - கைம்மாறு:-
திருட்டுப் பணம் கைமாறிவிட்டது.
இத்தொடரில் வரும் "கைமாறு" என்னும் சொல், ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாறிவிடுவதைக் குறிக்கிறது.
"தாங்கள் செய்த பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?"
இத்தொடரில் வரும் கைம்மாறு எனும் சொல்லுக்கு "உதவிக்கு மறு உதவி" எனும் பொருள் அமைதல் காண்க.
ஆயினும் எழுத்தாளர் பலரும் இந்த நுட்பம் அறியாமல், "கைம்மாறு" என்று எழுத வேண்டிய இடத்தில் "கைமாறு" என்று பிழையாக எழுதுகிறார்கள்.
ஒரு மெய்யெழுத்து (ம்) விட்டுப் போவதால் எத்தகைய பொருள் மாற்றம் ஏற்படுகிறது.
"கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு,
என்னாற்றும் கொல்லோ உலகு.''
எனும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தக்கது.

கேள்வியும், வினாவும்:-
ஏடுகளில், இதழ்களில் கேள்வி - பதில் பகுதி வெளிவருகிறது.
தேர்வில் எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்? என்று வினவுகிறோம்.
என் கேள்விக்கு என்ன பதில்? என்று பாட்டெழுதுகிறார்கள்.
வினா - வினவுதல் என்னும் பொருளில் இங்கெல்லாம் கேள்வி எனும் சொல் பயன்பட்டு வருகிறது.
ஆனால் கேள்வி எனும் சொல்லின் பொருள் வேறு.
கண்ணால் காணப்படுவது காட்சி என்பதுபோல் காதால் கேட்கப்படுவது கேள்வி.
காதுகளில் கேட்டல் என்பதுவே கேள்வி. அதனால்தான் கேள்விச் செல்வம் என்றனர்.
பேச்சு வழக்கிலும், "நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்று பேசுகிறோம்.
"அவர் வெளிநாட்டிற்குப் போய்விட்டதாகக் கேள்வி" என்று சொல்லுகிறோமே? என்ன பொருள்?
ஆகவே, தேர்வில் எத்தனை வினாக்களுக்கு விடை எழுதினாய்?
இந்தப் பத்திரிகையில் வினா - விடைப் பகுதி வெளிவருகிறதா?
என் வினாவிற்கு நீ விடை சொல்லியே ஆக வேண்டும்?
இப்படிச் சரியாகப் பேசவும் எழுதவும் முற்படுவோமா?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே:-
இப்படி மகாகவி பாரதியார் பாடிய காரணம் என்ன?
தமிழின் சொல்வளம் ஈடு இணையற்றது.
ஒரு செடியின் இலையைக் குறிக்க அந்த இலையின் பருவத்தையும் உணர்த்தக் கூடிய சொற்கள் தமிழில் உண்டு.
- துளிர் (செடியில் துளிர்விடும் நிலை)
- தளிர் (சற்றே வளர்ந்து தளிர்க்கும் நிலை)
- கொழுந்து (இன்னும் வளர்ந்து இளம் பச்சை நிறத்தில் உள்ள இலை)
- இலை (பச்சை நிறத்தில் முழுமை பெற்ற நிலை)
- பழுப்பு (பச்சை மாறி மஞ்சள் நிறமாகப் பழுத்த இலை)
ஆங்கிலத்தில் இவற்றைச் சொல்ல வேண்டுமானால் - அனைத்தையும் சொல்ல முடியாது, சில சொல்லலாம் - ஒட்டுச் சொற்களை இணைத்தே சொல்ல முடியும்.
Young leaf,​​ Grow leaf,​​ Yellow leaf,​​ Dry leaf *உடன் அடைமொழி சேர்த்தே சொல்ல முடியும்.