நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 31-40

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 31:-


ஆறாம் வகுப்பு முடிய மலேசியாவில் தொடக்கக் கல்விக்கான பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன.
தமிழ்ப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், மலாய்ப் பள்ளிகள் என அவை பிரிந்து இயங்குகின்றன.
அவரவர் தாய்மொழியைக் கற்க, தாய்மொழியில் படிக்க அங்கே வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
நம்மூரில் அனைத்து வசதிகளும் கொண்ட உயர்தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை விடச் சிறந்த வசதிகளோடு தொடக்கப் பள்ளிகள் இயங்குவதை நம் நாட்டில் காண்பது எப்போது என்ற ஏக்கமே தோன்றுகிறது.

சிறுவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வமும், ஊக்கமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் நம் காதுகளை எட்டவில்லை. ஆலய வழிபாடுகள் முறையாகச் செய்யப்படுகின்றன. நம் கலாசாரம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆலயங்கள் அழகாகவும், தூய்மையாகவும், வசதிகளோடும் விளங்குகின்றன. தேவாரம், திருவாசகம் மகளிர் குரல் வழியாக நம் செவிகளில் நிறைகின்றன. செய்தி ஏடுகளில் (நாளிதழ்களில்) ஆடவர் நால்வர் சிறை செய்யப்பட்டனர். மகளிர் இருவர் தப்பிச் சென்றனர் என்றும் பதின்ம வயதினர் (டீன் ஏஜ்காரர்) என்றும், அகப்பக்கம் (இணையத்தில்) என்றும் அருந்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை வியப்பைத் தருகிறது.

தமிழில் வடசொற் கலப்பு:-
தமிழில் கலந்துள்ள பல்வேறு மொழிகளுள் மிகப் பழைமை வாய்ந்த மொழி வடமொழி எனத் தக்க சமற்கிருதம்.
தமிழில் கலந்த சமற்கிருதச் சொற்களைத் தாம் வடமொழி, வடசொல் என இலக்கண நூலார் இயம்பினர்.
சங்க இலக்கியங்களிலேயே செந்தமிழோடு, வடசொற்களும் விரவியுள்ளன. "தமிழ்மொழி வரலாறு" எனும் நூல் எழுதிய சூரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டார். அவர், அந்நூலுள் பலவிடங்களில் "தமிழ் பாஷை" என்றே குறிப்பிடுகிறார். அந்த நாளில் தமிழ்மொழி என்பதனினும் தமிழ் பாஷை என்பதே வலுப்பெற்று இருந்துள்ளது.
பரிதிமாற் கலைஞருக்குப் பின், சுவாமி வேதாசலம் எனும் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர் பற்றி நாமறிவோம்.
இவ்விருவர்க்கும் முன்பே, எங்கோ இத்தாலியில் பிறந்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் சமயப் பரப்புரை செய்ய வந்த கான்ஸ்டான்டைன்டின் ஜோசப் பெஸ்கி எனும் கிறித்துவப் பாதிரியார் தம்பெயரை முதலில் தைரியநாதசாமி என்று வைத்துப் பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்ட வரலாறும் ஈண்டு நினைக்கத்தக்கது.

தமிழில் காலம் காலமாகக் கலந்துள்ள எண்ணற்ற வடசொற்களுள் சில பலவற்றுக்குக் கீழ் வரும் பட்டியலில் தமிழ்ச் சொற்கள் தந்துள்ளோம். இவற்றுள் பல சொற்கள் இப்போது எழுத்திலும், பேச்சிலும் ஆளப்பட்டு வருகின்றன. ஆயினும் அவற்றை நினைவுகூர்தல் அல்லது சில சொற்கள் அறிமுகப்படுத்தல் எனும் வகையால் கொள்க..

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 32:-

வடசொல் தமிழ்ச் சொல்
கிரமம் ஒழுங்கு
கிராமம் சிற்றூர்
சக்தி ஆற்றல்
சகோதரன் உடன்பிறந்தான்
சந்நிதி திருமுன்(பு)
சபதம் சூளுரை
சந்தோஷம் மகிழ்ச்சி
ஜலதோஷம் நீர்க்கோவை
சாபம் கெடுமொழி
சிநேகம் நட்பு
சுத்தம் தூய்மை
சுபாவம் இயல்பு
சேவை தொண்டு
தாகம் வேட்கை
நிபுணர் வல்லுநர்
பகிரங்கம் வெளிப்படை
பரிகாசம் நகையாடல்
பந்தபாசம் பிறவித்தளை
பிரசாரம் பரப்புரை
மந்திரம் மறைமொழி
மிருகம் விலங்கு
முகூர்த்தம் நல்வேளை
யுத்தம் போர்
இரகசியம் மறைபொருள்
வயது அகவை
வாகனம் ஊர்தி
வாதம் சொற்போர்
விகிதம் விழுக்காடு
விக்கிரகம் திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் மறை
வேகம் விரைவு
ஜாதகம் பிறப்புக் கணக்கு
ஜெபம் தொழுகை
ஜென்மம் பிறவி
ஜோதிடன் கணியன்
ஸ்தாபனம் நிறுவனம்
ஷேத்ரம் திருத்தலம்
யாகம் வேள்வி
போகம் நுகர்வு
மோகம் விருப்பு

கவிக்கோ ஞானச்செல்வன் வழக்கில் வழுக்கியவை:-
மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்" என்று பேசுகிறார்கள்.
"ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?" என்று வினவுகிறார்கள்.
இந்த முழியும், முளியும் சரியானவையா?
அல்ல.
விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
"ஒரே நாத்தமடிக்குது, சகிக்க முடியலே"
இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல்.
அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்) - பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல்.
இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
வழு திருத்தம்
அடமழை அடைமழை
அடமானம் அடைமானம்
உடமை உடைமை
உத்திரவு உத்தரவு (ஆணை)
ஊரணி ஊருணி
எகனைமுகனை எதுகை மோனை
ஏமாந்தான் ஏமாறினான்
ஒருவள் ஒருத்தி
ஒருத்தன் ஒருவன்
கத்திரிக்கோல் கத்தரிக்கோல்
காத்தாலே காலை
கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)
கிராணம் கிரகணம்
குத்துதல் (நெல்) குற்றுதல்
கேழ்க்கிறார் கேட்கிறார்
கோடாலி கோடரி
சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)
சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 33:-

ஞானச்செருக்கு

"திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையே' என்றான் மகாகவி பாரதி. ஆழ்ந்தகன்ற அறிவினால் வரும் பெருமிதத்தையே பாரதி ஞானச் செருக்கென்றான். மெய்யறிவுத் திறமுடையார் செருக்குடன் இருப்பது இயற்கையே. நம் தமிழறிவு பெருகினால் பிழைகள் நீங்கும்; பிழைகள் நீங்கிடில் தமிழ்மொழி சிதையாமல் செழிக்கும். மொழி செழிப்புற்றால் தமிழர் வாழ்வு வளம் பெறும். "நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே' என்றார் பாவேந்தர். "நன்னிலை உனக்கென்றால் எனக்கும்தானே' என்றும் அவர் தமிழோடு பேசுகிறார். இந்த அடிப்படை நினைவை உணர்வை நாம் எப்போதும் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கணச் செய்தியொன்று பார்ப்போமா?
நேற்று வந்தவன் இன்றும் வந்தான்.
இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர். ஒன்றும் புரியவில்லையா? உயர்நிலைப் பள்ளிப் பருவநினைவுகளை மனத்திரையில் ஓடவிடுங்கள். தமிழாசிரியர் இவற்றைப் பற்றி விளக்கியிருப்பாரே!

பெயர்ச்சொல் என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயர்ச்சொல்லில் ஆறுவகை தெரியுமோ? எடுத்துக்காட்டுகளை நோக்குக.
ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர்
ஆகப் பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும். இவற்றுள் தொழிற் பெயர் என்று ஒரு பெயர் வருகிறது. அஃது என்ன?

வந்தான் - வினைச்சொல் (வினை முற்று) இவன் வருதல் ஆகிய வினையைச் செய்தவன். இப்படிக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர். அவன் என்ன செய்தான்? வந்தான் என்னும் போது வினைச் சொல். வருதல் அவன் செய்த தொழிலுக்கு (வினைக்கு)ப் பெயர். ஆதலின் அது தொழிற்பெயர். ஆக வினைச் சொல் வேறு, தொழில் பெயர் வேறு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.

மீண்டும் எடுத்துக்காட்டுகள் காண்போம்.
பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்.
ஒரு தொழிலுக்கு (செயலுக்கு)ப் பெயராக வருவது தொழிற்பெயர். அத்தொழிலைச் செய்தவர்க்குப் பெயராக வருவது வினையாலணையும் பெயர். தொழிற் பெயர் காலம் காட்டாது. வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.

தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.
நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.
வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும் பெயர்.
தேடுதல்- தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, ஆண், பெண், பலர் எனும் பாகுபாடு காண முடியாது.


வழு - திருத்தம்
சுவற்றில் - சுவரில்
சோத்துப்பானை - சோற்றுப்பானை
திரேகம் - தேகம் (உடல்)
தொந்திரவு - தொந்தரவு(தொல்லை)
துகை - தொகை
தேவனாதன் - தேவநாதன்
நிலயம் - நிலையம்
(அகல) நிகளம் - நீளம்
புத்து - புற்று
புண்ணாக்கு - பிண்ணாக்கு
புழுக்கை- பிழுக்கை
முழுங்கி - விழுங்கி
வயறு - வயிறு
வரவு சிலவு - வரவு செலவு
வலது, இடது - வலம், இடம்(வலப்பக்கம்,இடப்பக்கம்)
வெய்யில் - வெயில்
வெண்ணை - வெண்ணெய்
வைக்கல் - வைக்கோல்
கண்ணாலம் - கலியாணம் (திருமணம்)
கயட்டி, களட்டி - கழற்றி
குசும்பு - குறும்பு
சொலவடை - சொல் வழக்கு
சொரண்டு - சுரண்டு
சுளட்டி சுழற்றி

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 34:-

வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம்

ஒருவினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றார், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை.
இவ்வாறு வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம். படித்த எனும் சொல் முற்றுப் பெறவில்லை. பையன் என்ற பெயர்ச் சொல்லைச் சேர்த்தால் படித்த பையன் என்று முற்றுப் பெறுகிறது. ஆதலின் படித்த என்பது பெயரெச்சம். (படித்த என்ற சொல்லோடு, பையன் எனும் பெயர் எஞ்சியுள்ளது) படித்த என்பதைப் படித்து என்று மாற்றினால் அதுவும் முற்றுப் பெறவில்லை. வந்தான் என்றொரு வினைச் சொல்லைச் சேர்த்தால் அது முற்றுப் பெறும். அஃதாவது படித்து வந்தான் என்றாகும். ஆதலின் இது வினை எஞ்சிநின்ற சொல் ஆதலின் வினையெச்சம் எனப்படும். (படித்து என்ற சொல்லுடன் வந்தான் எனும் வினை எஞ்சியுள்ளது) ஓரளவு புரிந்திருக்க வேண்டுமே!
நினைவிற் கொள்க:
படிப்பறிவில்லாத சிற்றூரில் வாழும் ஒரு பெண்ணும் கூட,"ரோட்டு ஓரமாப் போ, பாத்துப் போ' எச்சரித்துத் தன் மகனை அனுப்புகிறாள். தமிழ்மொழியின் அழுத்தமான ஓரிலக்கணம் ஆங்கிலச் சொல்லில் கூட ஏற்றிப் பேசப்படுகிறது. ரோடு + ஓரம் = ரோட்டோரம், ஆறு+ கரை =ஆற்றுக்கரை (ஆத்துக்கரை), சோறு + இல் = சோற்றில் (சோத்தில்), காடு + வழி = காட்டு வழி என்றெல்லாம் தமிழில் வல்லொற்று இரட்டித்தல் பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.
அடையாற்றில் கூட்டம் நடைபெற்றது என்பதை அடையாறில் கூட்டம் நடைபெற்றது எனில் அடை ஆறு (6) என எண்ணைச் சுட்டும். திருவையாற்றில் இசை விழா என்பதைத் திருவையாறில் என்றெழுதினால் திரு - ஐ - ஆறு ஐந்து ஆறு (5,6 இல்) இசைவிழா என்று எண்ணையே சுட்டும். இடத்தைச் (ஊரை)சுட்டாது. ஆற்றில் எனில் நீரோடும் ஆற்றையும், ஆறில் எனில் ஆறு எனும் எண்ணில் வேறோர் எண்ணைக் கழித்துச் சொல்லுதலையும் குறிக்கும். (ஆறில் நான்கு போனால் மீதம் என்ன?) இதழாளர்கள், செய்தியாளர்கள் கவனத்தில் கொள்க.

ஆடிக் கிருத்திகை (கார்த்திகை) என்று எழுதுகின்ற எழுத்தாளர் தை கிருத்திகை என்று எழுதுகிறார். ஏன்? தைக் கிருத்திகை என்பதுதானே இயல்பான ஒலி. ஒற்று மிக வேண்டிய போது விட்டும், மிக வேண்டாத இடத்தில் "கண்டுக் கொண்டேன்' என ஒற்று (மெய்) இட்டும் எழுதும் வழக்கத்தை மாற்றிட வேண்டுமன்றோ?

காடி தமிழ்ச் சொல்லா?
ஆம். யாழ்ப்பாணம் நா.கதிரைவேல் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியிலும், சைவ சித்தாந்தக் கழகத்தின் தமிழ் அகராதியிலும், பிறவற்றிலும் இச்சொல்லுக்குப் பொருள்கள் எழுதப்பட்டுள்ளன. காடி - புளித்தநீர், ஒரு வகை வண்டி, ஒரு மருந்து, நெய், கள் எனப் பல பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.

மலேசியத் தமிழர் வண்டி எனும் பொருளில் காடியைச் சொல்லுகிறார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆறுமுகமுதலி என்பவரும் அவருடன் ஐவரும் தமிழகம், சென்னை வந்திருந்தார்கள். தமிழ்மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள், மறந்துவிட்டவர்கள். அவர்களும் காடி ஏற்பாடு செய்யுங்கள் என்று பேசினார்கள்.

காடி எனும் சொல் இந்தியன்றோ? இந்தியில்தான் வண்டியைக் காடி என்பார்கள். இந்தி தமிழ்நாட்டில் நுழைவதற்கு முன்னே இருநூறு, முந்நூறு ஆண்டின் முன்புலம் பெயர்ந்த தமிழர்களின் வழிமுறையினர் தாம் மலேசியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் வாழுகின்றார்கள். 1918}இல் முதல் பதிப்பு கதிரைவேல் பிள்ளை அகராதி வந்துள்ளது. இவர் இலங்கை யாழ்ப்பாணத்தார்.
இந்தி மொழி பல மொழிச் சொற்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டுள்ள மொழி. அந்த வகையில் தமிழ்க் காடிதான் இந்தியிலும் காடி ஆகியுள்ளது. ஆனால் தமிழ்க் காடி ஒலியிலிருந்து சற்றே வேறுபட்டு இந்தி காடி ஒலிக்கிறது. மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பேச்சுக்குக் காடியும் ஓர் எடுத்துக்காட்டு.

மின்சார விசிறி, மின்விளக்குப் போன்றவற்றை நாம் ஆன் பண்ணு என்கிறோம். அல்லது சுவிட்சைப் போடு என்கிறோம். லைட்டைப் போடு, ஃபேனைப் போடு என்பதும் உண்டு.

விசிறியைத் தட்டிவிடப்பா, வெளிச்சம் தட்டிவிடப்பா என்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். அந்நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் உணர்வு மங்காமல் வாழ்கிறார்கள் போலும்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 35:-

அண்மையில் ஒரு தலைவரைப் போற்றிப் பாராட்டிய மற்றொரு தலைவர், ஒப்புயர்வற்ற தலைவர்களில் ஒருவர் இவர் (பெயர்) என்று பேசியதாகச் செய்தி போட்டிருந்தார்கள். ஒப்பு, உயர்வு அற்ற என்றால் அந்தத் தலைவருக்கு ஒப்பானவர்களோ உயர்வானவர்களோ வேறுயாரும் இலர் என்பதுதானே பொருள்! அப்புறம் எப்படித் தலைவர்களுள் ஒருவர் என்றுரைப்பது! பலருள் ஒருவர் ஒப்பும் உயர்வும் அற்றவர் ஆவாரா?

பொருள் மாறிவிட்ட பழந்தமிழ்ச் சொற்கள்:
"மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' எனும் பிசிராந்தையார் பாட்டு வரிக்கு, "செத்துப்போன என் மனைவியும் பெருகிய பிள்ளைகளும்' என்று இந்நாளில் பொருள் கொள்ளக் கூடும். மாண்ட எனில் மாட்சிமையுடைய (மேலான) என்பது பழந்தமிழ்ப் பொருள். நிரம்பினர் என்பதற்கு கல்வி, அறிவு நிரம்பியவர்கள் என் பிள்ளைகள் என்பதுதான் சரியான பொருளாகும்.

துஞ்சிய என்றால் தூங்கிப் போய்விட்ட என்ற பொருள் இந்நாளில் கருதக்கூடும். "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது' என வருமிடத்தில் குளமுற்றம் என்ற ஊரில் மாண்டுபோன (இறந்த) கிள்ளிவளவன் என்பதே சரியான பொருளாம்.

மடப்பயல் என்றால் முட்டாள் பையன் - அறிவற்றவன் என்று பொருள் கொள்கிறோம். மடம் என்பது இளமையைக் குறிக்கும் ஒரு சொல். (பூசை செய்யும் மடம் என்பது வேறு)
மானே மட மகளே என்றால்,மான் போன்ற இளம் பெண்ணே என்று பொருள். மடக்கொடி கேளாய் எனில் கொடி போன்ற மெல்லிய இளம் பெண்ணே கேட்பாயாக என்பதே பொருள். பெண்ணிற்குச் சிறந்த நான்கில் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) மடம் என்பது இளமையைக் குறிப்பதேயாகும். (காணாத ஒன்றைக் கண்டபோது ஒருவகையான வியப்பு ஏற்படும். அதுவே பயிர்ப்பு எனப்பட்டது.

எழுத்துப் பிழை தரும் இடர்ப்பாடுகள்
ஒரு திருக்கோவிலின் விழா அழைப்பிதழில் அணைவரும் வருக எனக் கண்டோம். (அனைவர்- எல்லாரும், அணைவர் - அணைப்பவர்) இப்படிப் பொருள் கெடலாமா?

மற்றொரு பெரிய இசை நிறுவனம் ஒன்றின் அழைப்பு மடலில் வருக! இசையின்பம் பெருக! என்றிருந்தது.
"இசையின்பம் பெற்றிட வருக' என்பதுதான் அவர்தம் கருத்து. ஆனால் பெறுக, பெருக எனப் பிழையாகிவிட்டது. இசையின்பம் பெருகிட வருக என்றெல்லாம் மழுப்பலாம். பருகிட என்று சொன்னாலாவது பொருத்தமாகும். அப்படியாயின் வருக, இசையின்பம் பருக என்றிருக்க வேண்டும்.

நல் +நாடு= நன்னாடு; சிலர் நன்நாட்டில் என எழுதுகிறார்கள். நல்ல நாட்டில் என்றெழுதலாம். புணர்ச்சி விதிப்படி நன்னாடு என்றெழுதுதலே சரியாகும். முன்னரே நான்கு நிலம்- நானிலம் என்பதைச் சிலர் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இது தவறு. நான்கு ஆகிய நிலம் என்று இதற்குப் பொருள் என்றெழுதியுள்ளோம்.

ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரம்: "குழந்தைப் பேரின்மையா?' இதைக் கண்டு வருந்தினோம். குழந்தைப் பேறின்மையா? என்று சரியாக எழுத வேண்டும்.
பேறு - பெறுதல். குழந்தைப் பேறு- பிள்ளையைப் பெறுதல். இதனைப் பேரில்லையா எனில் குழந்தைக்குப் பெயர் (பேர்) இல்லையா என்று பொருள் ஆகாதோ? குழந்தைப் பேறு என்று "ப்' என்ற மெய்யெழுத்தும் மறக்காமல் இடப்பட வேண்டும்.

சாற்றி, போற்றி, ஏற்றி
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள். ஒரு சாமிக்கு கூர்ம பதக்கம் சாற்றி என்று செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது. கூர்ம பதக்கம் சாத்தி என்றே எழுத வேண்டும். இவ்வாறே விழாக்களில் "பொன்னாடை போற்றி' என்று சொல்லுகிறார்கள். பொன்னாடை (?) போர்த்தி என்றே சொல்ல வேண்டும். உச்சரிப்பில் அச்சம் வருமெனில் அணிவித்து மகிழ்கிறோம் என்று சொல்லலாமே!

ஏத்துதல்- பாராட்டுதல், போற்றுதல் என்று பொருள் தரும் சொல். இறைவனை ஏத்திப் பாடினார் என்றால் இறைவனைப் போற்றிப் பாடினார் என்று பொருள். இதனை ஏற்றிப் பாடுதல் எனல் பிழை. ஏத்துதல் என்பதை ஏற்றுதல் எனச் சொன்னால் பொருளே மாறிவிடும். கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் எனுமிடங்களில் ஏற்றுதல் வரும். வணங்குதல், துதித்தல், போற்றுதல் யாதாயினும் ஏத்துதல் எனல் வேண்டும்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 36:-


பிழைகள், பிழைகள், பிழைகள்


ஒரு வழக்கறிஞர் தொலைக்காட்சிச் செய்தியில் பேசுகிறார்:-

"உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது", இந்தத் தொடரை மூன்று முறைக்கும் மேல் அந்நிகழ்வில் அவர் பயன்படுத்தினார். "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று சொல்ல வேண்டிய அவர், உச்சநீதிமன்றத்திற்கே யாரோ உத்தரவிட்டுள்ளது போலச்
செயப்பாட்டு வினையாக்கிப் பேசினார். அன்றியும் உத்தரவு - உத்திரவு ஆதலும் பிழை.

அந்த நற்செயலில் ஈடுப்படுவது, ஈடுப்படுவது என்று பலமுறை ஓர் அறிஞர் ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றும்போது சொன்னார்.
ஈடுபடுவது என்பதை ஈடுப்படுவது என்று அழுத்த வேண்டா. இயல்பாய் இருக்கட்டும்.

மற்றுமொருவர் உரையாற்றுகையில் அவரது தமிழ் உச்சரிப்பு நம்மை அதிர வைத்தது. நாம் அந்த கொள்கைகளைக் கட்டி காக்க வேண்டும். அந்தக் கொள்கைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்று சொல்லத் தெரியாதவரா அவர்?

"சமூகத்தில்... அதன் வளியை நாமுணர முடியாது" என்றார். வலி, வளியாகிவிட்டது. (வலி - துன்பம், வளி - காற்று)

மேலும் பேசும்போது கவிதை குழந்தைகள் என இருமுறை சொன்னார். கவிதைக் குழந்தைகள் என்று அல்லவா சொல்ல வேண்டும்?

இன்னும் தொடர்கிறார்:-

"புள், மரம், செடியெல்லாம்..." இங்கே புல், மரம், செடி எனச் சொல்ல வேண்டியதைப் புள், மரம், செடி என்றார். (புல் - மண்ணில் வளரும் சிறு தழை; புள் - பறவை)

லகர, ளகர வேறுபாடின்றி அல்லது லகரத்திற்கு ளகரம், ளகரத்திற்கு லகரம் ஒலித்தல் பெருங்கேடாம். இவ்வாறே ழகரத்தை ளகரமாக, லகரமாக ஒலித்தலும் மிகப் பெருங்கேடே.

இதுவும் தொலைக்காட்சி ஒன்றில் கேட்டதுதான்:-

"மாளிகை மேடை (மேட்டை, மேடை என்றார்) ஒட்டிய பகுதியில் ஆதாரங்கள் இருக்கிறது... கோவில்கள் இருக்கிறது.... பள்ளிக்கூடங்கள் இருக்கிறது.... அடையாளங்கள்
இருக்கிறது", ஓரிடத்திலாவது இருக்கின்றன என்ற பன்மையில் முடிக்கவில்லை. முடிவில் ஓரிடத்தில் குறிகோள் இல்லாமல் போய்விட்டது என்றார். குறிக்கோள் எனச் சொல்ல நா எழவில்லை போலும்.

ஒரு நூலில் படித்த சொற்றொடர்:-

"அந்தச் சந்தையைப் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், இயற்கையாகவும் இருந்தன". அதெப்படி வித்தியாசமாக இருப்பது, இயல்பாக இருக்க முடியும்? இது கருத்துப் பிழை. கடைசியில் இருந்தன என்று பன்மையில் முடித்துள்ளார். ஏன்? சந்தை ஒருமைதானே? வித்தியாசமாக, இயற்கையாக என்பதால் பன்மையில் முடித்தார் போலும்!

"புல்லாங்குழல்கள் சில நீளமானது; சில குட்டையானது". சில என்றால் நீளமானவை, குட்டையானவை எனப் பன்மையில்தான் முடிக்க வேண்டும்.

ஒலித் திரிபுப் பெயர்கள்:-

சட்டை - ஷர்ட் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலியே இது. பழந்தமிழில் மெய்ப்பை எனும் ஒரு சொல்லுண்டு.

பொத்தான் - பட்டன் என்னும் சொல் தமிழ் ஒலியேற்றுப் பொத்தான் ஆயிற்று. பொத்தலில் மாட்டப்படுவது என்பது வலிந்து சொல்லுதல் ஆகும்.

ஆஸ்பத்திரி - ஹாஸ்பிடல் எனும் சொல்லே ஆஸ்பத்திரியாயிற்று. (மருத்துவமனை - தமிழ்ப் பெயர்)

போத்தல் - பாட்டில் என்பதன் தமிழ் ஒலியே போத்தல். சீசா என்றொரு வழக்குச் சொல் உண்டு.

சால்வை - ஷால் எனும் சொல் சால்வை என்றாயிற்று.

புத்தகம் - புஸ்தகம் என்பதன் தமிழ் வடிவம் இது. (சுவடி, நூல், ஏடு என்பன தனித்தமிழ்ச் சொற்கள்) ஓலைச் சுவடியின் ஓரத்தில் பொத்தல் இட்டு ஓலைகளை அடுக்கிச் சேர்ப்பது.

பொத்தல் அகம் - புத்தகம் என்று வலிந்து சொல்வார் உளர்.

வங்கி - பேங்க் என்பதன் தமிழ் ஒலியமைப்பே இது.

ப - வ ஆதல் தமிழில் பல உண்டு.

பீமன் - வீமன்
இரபீந்திரநாத் - இரவீந்திரநாத்.

பேங்க் என்பதைப் பாங்கு என்றே சொல்லலாம். பணத்தைப் பாங்காக வைக்கும் இடம் என்பதால்.

உலகு - உலகம் எனும் சொல் திருமுருகாற்றுப்படை தொடங்கிப் பல்வேறு தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ள சொல். லோகம் என்பது வடசொல். லோகநாதனை உலகநாதன் என்போம். லோகம் உலகமாயிற்று என்பது ஒரு கருத்து. இல்லை உலகிலிருந்தே லோகம்
வந்தது என்பார் உளர்.

உல், உல்கு என வேர்ச்சொல் காண்பர் அவர். வையம், ஞாலம், பார் என்பன தூய தமிழ்ச் சொற்கள்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 37:-

""அவர் ஏன் இப்படி ரொம்ப கீழே குனிஞ்சு வணக்கம் சொல்லுறார்?'' - ""அதுவா? அவர் தன்னோட தாழ்வான வணக்கத்தைத் தெரிவிச்சுக்கிறாராம்''

தமிழிலிருந்து...
ஆங்கில மொழி அகராதியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. கட்டுமரம் (ஒரு வகைப் படகு) என்பது கட்டமரான் என்றும் மிளகுநீர் (ரசம்) முலிகுடவ்னி என்றும் காணலாம். பாதை எனும் தமிழ்ச்சொல்லே பாத் என ஆங்கிலத்தில் ஆகியது. இவ்வாறே நாசி என்பது நோஸ் என்றும் காசு என்பது கேஷ் என்றும் ஆயின எனக் கொள்ளலாம். சந்தனம், சாண்டல் என்றும் அரிசி, ரைஸ் என்றும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்றன.

கட்டுமரம், மிளகுநீர், சந்தனம், அரிசி போன்ற பொருட் பெயர்களை அப்படியே தம் மொழியில் தம்மொழி இயல்புக்கேற்ப ஏற்றினர் ஆங்கிலேயர்.

பாதை என்பது வழி, ஆறு (ஆற்றுப்படை), அதர் என்றும் தமிழில் வழங்கக் காணலாம். (ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்) நாசி, மூக்கு என்றே நற்றமிழில் வழங்கப்பட்டு வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறி என்போம். இப்பொறிகளால் உணரப்படுவன ஐம்புலன் என்போம். காசு எனும் சொல்லிற்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு. ஆசு, மாசு, காசு என்பன ஒரே பொருள் கொண்டவை.

பொற்காசு, வெள்ளிப் பணம் என்பவை (காசு, பணம்) மக்கள் பேச்சிலும் எழுத்திலும் இன்றும் இருப்பவை. வாசி தீரவே காசு நல்குவீர் எனத் தேவாரத்தில் காசு (பணம் எனும் பொருளில் இடம் பெற்றுள்ளது)

முத்தமிழ் என்று இயல், இசை, நாடகம் எனப் பிரித்ததுபோல் இன்றைய எழுத்தாக்கத்தில் அச்சியல், கணினியல், வடிவியல் எனும் மூவகைப் பிரிவுகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இந்த மூவகையானும் கூட மொழி சிதைந்திட வாய்ப்புகள் உள்ளன. இவற்றாலும் தமிழ்மொழியின் தனித்தன்மை கெடாமல், விழிப்பாக நாம் இருந்திட வேண்டும்.

நேரmo பத்tharai வருவற்ட்ர் நித்thirai என்பதுபோல் எழுத்துக் கலப்புச் செய்து புதுமை செய்கிறார்களாம். வேண்டாம் ஐயா இந்தப் போக்கு.
இது என்ன தமிழ்?

அண்மையில் நிகழ்ந்த தேர்தல் விளம்பரங்களுள் ஒன்று- தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தில் காட்டினார்கள்:
கண்ணியம் குழையாமல்...
கண்ணியத்தைக் குலைக்காமல் (கெடுக்காமல்) என்று நினைத்துக் கொண்டு இப்படி எழுதியுள்ளார்கள். குழைதல் என்றால் சோறு குழைதல் (மிகவும் வெந்து போவது) பற்றிச் சொல்லலாம். குழைந்து குழைந்து பேசுபவர் பற்றிச் சொல்லலாம். சுழற்றிச் சுழற்றி வீசுவதைச் சொல்லலாம். (குழைக்கின்ற கவரியின்றி- கம்பன்)

ஒருவர் பேசுகிறார்: "எல்லார்க்கும் எனது தாழ்வான வணக்கம்'. நல்ல உயர்வான வணக்கத்தை அவர் சொன்னால் என்ன? ஏன் தாழ்வான வணக்கம் சொல்ல வேண்டும். அவர்தம் வணக்கத்தை மிகவும் பணிவோடு (தாழ்மையுடன்) சொல்லுகிறாராம். இந்தத் தமிழ் வேண்டாம் அய்யா... வேண்டாம்!

பலமுறை எழுதிவிட்டோம். ஒருமை, பன்மை பற்றிக் கவலையின்றி வாக்கிய அமைப்புச் செய்கிறார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள நூலில், "அவரது அனுபவ உரை எனக்குப் பெரிதும் பயன் தந்தன' என்று எழுதியுள்ளார். அனுபவ உரை பயன் தந்தது என்றுதானே எழுத வேண்டும்? அல்லது அனுபவ உரைகள் பயன் தந்தன எனலாம். ஏன் இப்படி எழுதுகிறார்கள். அவரே மேலும் ஓரிடத்தில்: "எனக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடிய நூல்கள் எவையெனத் தாங்கள் நினைக்கிறீர்களோ, அதை வாங்கித் தாருங்கள்'. நூல்கள் எவை எனத் தொடங்கி அதை என முடித்துள்ளார். அவற்றை என்று எழுதத் தெரியவில்லையா? அக்கறை இல்லை. நாவல் இலக்கியம் என்ற சொல்லாட்சியும் பல இடங்களில் அந்நூலில் பார்த்தோம். புதினம் என்று தமிழில் எழுதலாகாதோ?

மற்றொரு மூத்த பேராசிரியர் நூலுள் பார்த்தோம்: "வீரம், தன்னம்பிக்கை, நாவன்மை, புத்திக் கூர்மை அனைத்தும் அவனிடம் உள்ளது'. அனைத்தும் உள்ளன என்று முடித்திடத் தெரியாதவரா? ஆங்கில மொழியில் எழுத்தாளர் எவரும் இப்படி எழுதுவார்களா? தமிழ் என்றால் அத்துணைத் தள்ளுபடியா?

"முதுகலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நான் முதல் வகுப்பில் முதல் மாணவனாக பல்கலைக் கழக அளவில் வெற்றிப் பெற்றேன்' முனைவர் பட்டம் பெற்றவரின் நூலொன்றில் தன்னைப் பற்றி இப்படி எழுதியுள்ளார். மாணவனாகப் பல்கலைக் கழக அளவில் என்று ஒற்றுமிக வேண்டும். அதை விட்டுவிட்டார். வெற்றி பெற்றேன் என்று இயல்பாக (ஒற்று மிகாமல்) வர வேண்டிய இடத்தில் ஒற்றைச் சேர்த்துவிட்டார்!.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 38:-

ஒரு தமிழ் ஆர்வலர் நம்மிடம் பேசும்போது பலமுறை இப்படிச் சொல்லியுள்ளார்:-
"வடச்சொல் கலவாமல் பேச வேண்டும்.."
ஐயா, இது வடச்சொல் அன்று; வடசொல் என்று அழுத்தாமல் சொல்லுங்கள் என்று நாமும் பலமுறை சொல்லிவிட்டோம். மனிதர் மாற்றவில்லை. என் செய்வது?

அவருக்கு லகர, ளகர உச்சரிப்பும் சரியாக வருவதில்லை.
"புளி வாளைப் பிடித்த கதைதான்" என்றாரே ஒரு நாள். சிரிப்புத்தான்; வேதனைச் சிரிப்பு.
புலி - புளியாகவும், வால் - வாளாகவும் அவர் ஒலிப்பில் மாறி நம்மைக் கொல்கின்றன.
இந்த நிகழ்வுகள் யாவும் உண்மையில் நிகழ்ந்தவை. ஒன்றும் கற்பனையன்று. சற்றே அக்கறையோடு முயன்றால் இத்தகைய பிழைகளைத் தவிர்த்துப் பேச முடியும். எழுத முடியும்.

அண்மையில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தோம். "பக்தர்கள் தவரவிடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொருப்பல்ல", என்று பலகை எழுதி வைத்துள்ளார்கள். எல்லாரும் தமிழை முறையாகப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் ஒரு பட்டதாரியான செயல் அலுவலர் அங்கிருப்பாரே - அவர் பார்த்திருக்கமாட்டாரா? பார்த்தும், அவருக்கும் தவறு தெரியவில்லையா? "பக்தர்கள் தவற விடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொறுப்பன்று" எனத் திருத்தி எழுதுங்கள் என்று எழுதிக் கொடுத்து வந்தோம். திருத்தி எழுதியிருப்பார்களா?

ஓர் இலக்கியக் கூட்டம்.
நாம் தலைமையேற்றிருக்கிறோம்.
கல்வியின் சிறப்பு, மேன்மை பற்றி பேசினார் ஒருவர்.
"யாதானும் நாடாமல் யாதானும் ஊராமல் சாந்துணையும் கல்லாதது ஏன்?" என்று திருக்குறளைச் சிதைத்து வினாவெழுப்பினார்.
நாடாமல் - விரும்பாமல், தேடிச் செல்லாமல்,
ஊராமல் - என்ன பொருள் என்றே சொல்ல முடியவில்லை.
(ஊர்ந்து செல்லாமல் எனலாமோ?)
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு".
என்பது திருக்குறள்.

கற்றவர்க்கு எல்லா நாடும் எல்லாம் ஊரும் தம் சொந்த நாடாகவும், சொந்த ஊராகவும் ஆகிவிடும்.
அவ்வளவு சிறப்புமிக்க கல்வியைச் சாகும் வரையில் ஒருவன் கல்லாதிருப்பது ஏன்?
நாடு + ஆம் + ஆல்
ஆல் என்பது அசை நிலை (பொருளற்றது)
ஊர் + ஆம் + ஆல்
ஆல் என்பது அசைநிலை.
நாடாம், ஊராம் என்பது பொருள்.

கையெழுத்தும், கையொப்பமும்:-
"கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையெழுத்து இல்லை. என்றாலும் அவரது கையெழுத்தையும், கடிதத்தில் உள்ள கையெழுத்துகளையும் சரி பார்த்தபோது இரண்டும் பொருந்தி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்" - இது பத்திரிகைச் செய்தி.
இச்செய்தியில் கையெழுத்து எனும் சொல் இரண்டு பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆனால் புரிந்து கொள்ள இயலாதவர்க்கு ஒரே குழப்பமாக இருக்கும்.

இதனை - கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையொப்பம் இல்லை என்று மாற்றிவிட்டால் செய்தி தெளிவாகிவிடும். கையொப்பத்தையும் கையெழுத்து என்று எழுதுவதால் குழப்பமே உண்டாகும்.
ஒருவர் ஒரு கடிதம் எழுதுகிறார். கடித வாசகம் அவர்தம் கையெழுத்தினால் ஆனது. அவ்வாசகத்தின் முடிவில் தம் பெயரை ஒப்பமிடுகிறாரே - அது கையொப்பம்.

சில்லென்று காற்று - ஓர் ஆராய்ச்சி:-
"சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாலே", இந்தப் பாடல் வரிகள் பலருக்கும் தெரியும்.
திரைப்பாடலாகப் பாடப்பட்டிருப்பினும் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இருக்கும் தமிழ்ப்பாட்டு இது.

தண்ணி சில்லுன்னு இருக்கு என்று பேசுகிறோம்.
"சில்லுன்னு காத்து வீசுது" என்பதுவும் பேச்சு வழக்கில் உள்ளது.
இந்தச் சில் தமிழா?
தமிழில் சில் என்பதற்கு அற்பம், சிதறிய பகுதிகள், சில எனும் பொருள்கள் உண்டு.
சில் + சில = சிற்சில.
சில்லறை (பாக்கி, சொச்சம்)வழக்கத்தில் உள்ளது.

ஆங்கிலத்தில்தான் Chill எனும் சொல் மிகக் குளிரானது எனும் பொருளில் காணப்படுகிறது. சிலுசிலுவென நீர் ஓடியது - சில் ஒலிக்குறிப்பாய் வருதல் உண்டு.
- "சும்மா ஜில்லுன்னு இருக்கணும்"
- "ஜில் ஜில் ஜிகர்தண்டா"
என்பன மிகக் குளிர்ச்சியைக் குறிக்க நம் புழக்கத்தில் உள்ள கிரந்த எழுத்தோடு (ஜி) கூடிய சொற்கள்.
சிலீர்னு காற்றடிக்குது என்றும் சொல்கிறோம்.
இந்தச் சில், சிலீர், ஜில், Chill எல்லாம் ஒன்றா?
ஒரே மாதிரிச் சொற்கள் பலமொழிகளில் இருப்பது உண்மையே.
ஆயினும் தமிழ் மிகத் தொன்மைவாய்ந்த மொழி. தமிழிலிருந்து பல சொற்கள் பிறமொழிகளில் கலந்துள்ளன. குறிப்பாகத் தமிழிலிருந்து ஆங்கிலம் ஆகி, மீண்டும் அது தமிழ் வடிவம் பெற்றமையும் உண்டு.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 39:-

குறுக்கு என்றால் நாமறிவோம். நகரங்களின் விரிவாக்கப் பகுதிகளில் "கிராஸ் ஸ்ட்ரீட்' என்று காண்கிறோம். இதனைத் தமிழில் குறுக்குத் தெரு என்போம். கிறித்துவ சமய அடையாளம் கிராஸ் எனப்படுகிறது. இந்தக் கிராஸ் - குறுக்கு எனும் சொல்லின் திரிபேயாகும். இந்தக் கிராஸ், பின்னர் குருசு என்று பாதிரிமார்களால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் சிலுவை எனப் புதிய சொல் உண்டாயிற்று.

நாமம் (பெயர்) எனும் சொல்லிலிருந்தே நேம் (name) வந்தது. பிதா (தந்தை) ஃபாதர் ஆனார். மாதா (அன்னை) மதர் ஆனார். தந்தையெனும் தூய தமிழ்ச் சொல்லே டாடி(dady ) ஆயிற்று. அம்மா எனும் தமிழ்ச் சொல்லே மம்மி ஆயிற்று.


ஒன்று - ஒன் என்பதும், திரிகடுகம் (திரி-மூன்று) திரி- திரீ என்றாகியிருப்பதும், எட்டு - எயிட் என்பதும், பெருமை "புரெவுடு' ஆனதும், பழம்-ஃபுரூட் ஆனதும் ஒப்புநோக்கத்தக்கன.

ஏனிந்த ஒலிப்பு?

சிவன், சிவா, சக்தி இச்சொற்களை நாமறிவோம். இவற்றை ஷிவன், ஷிவா, ஷக்தி என்று இப்போது சிலர் பேசி வருகிறார்கள். ஏன்? நான் "ஷத்தியமாய்ச் சொல்றேன்' என்றார் ஒருவர். ச வரும் இடங்களில் எல்லாம் ஷ உச்சரிப்பது சிலரது வழக்கமாக உள்ளது. ஷெய்தி என்னவென்றால், என்று பேசுகிறார்கள். சண்முகம் - இதனை ஷண்முகம் என்பது வழக்கம்தான். ஷண்முகத்தை, சண்முகம் என்பது சரியே. ஷண் என்பது ஆறு எனப் பொருள்படும். ஷண் மதம் அறுவகைச் சமயம் என்போம். ஷண்முகத்தை ஆறுமுகம் என்போம்.

இப்போது வேடிக்கை (வேதனை?) என்னவென்றால் ஒரு திரைப்பட இயக்குநர் தம்பெயரை ஷெல்வன் என்று வைத்துக் கொண்டுள்ளார். செல்வன் என்பது தனித்தமிழ். தூய தமிழ்ச் சொல். இதனை ஷெல்வன் என்றாக்கியது கொடுமையன்றோ? சங்கர் - ஷங்கர் ஆகலாம். செல்வன், ஷெல்வன் ஆகக்கூடாதா? என்று சிலர் வினவுவர். ஆம், ஆகக் கூடாது. ஷங்கர் வடசொல். தமிழில் சங்கர் என்றோம். சரி. செல்வன் தமிழ்ச்சொல். இதை ஷெல்வன் ஆக்கலாமா?

ஷெல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பறவையின் கூட்டை ஷெல் என்பர். சிப்பியையும் ஷெல் எனலாம். ஷெல்வன் எனும் சொல்லுக்கு வடமொழியிலாவது பொருளுண்டா? இல்லை.

பெயர் புதுமையாக இருக்க வேண்டும். பொருளைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை என்ற மனப்போக்கு வரவேற்கத்தக்கதா? சிவம்- செம்மை, தூய தமிழ்ப் பெயர். சிவத்தை ஷிவம் ஆக்குவது தவறு. சிவத்தினின்று வந்த சொல் சைவம். ஷிவ ஷக்தி என குழகுழ பேச்சு எதற்கு? தமிழைச் சிதைப்பதற்கா? அந்தச் சமயத்தில் என்பதைக் கூட அந்த ஷமயத்தில் என்கிறார்களே! அறிவாளர்(அறிவுஜீவி)களுக்கு அழகா இது?

தகவல் பிழை:

ஓர் எழுத்தாளர்- கட்டுரையாளர் தாம் எழுதும் செய்தியில் பிழையான அல்லது தவறான தகவல்களை வாசகர்களுக்குத் தந்திடல் ஆகாது. தரும் தகவலில் தவறு இருப்பின் அது தகவு+அல் (தகவல்லாத) பிழையாகிவிடும்.

""தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டபோது நடைபெற்ற விழாவிற்கு வந்த தலைவர்.... '' வேறொரு பொருள் பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இத்தகவல் தவறு. தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் தமிழ்நாட்டோடு இணைக்கப்படவே இல்லை. இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணை பற்றிய சிக்கலே எழாது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் இப்போது உள்ளன. தேவிகுளம் பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. மூணாறு எனும் மலை வாழ்விடமும் உள்ளது. தமிழர்களே மிகுதியாக வாழும் இப்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இணைக்கப்படவில்லை. நல்லவேளை, அப்போது தமிழ்நாட்டு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் முயற்சியால் பெரியாற்று நீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை நிலைநாட்டப்பட்டது.