நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 41-50

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 41:-

உண்மை, வாய்மை, மெய்ம்மை
இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு உண்டு. இம் மூன்றாலும் மனிதன் தவறின்றி வாழ வேண்டும். இதனை "மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் என்பது வடமொழி) உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக- சொல்லாக- பேச்சாக வெளிப்படுவது வாய்மை.
வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய்- உடம்பு- செயற்படுதல்)
உள்ளத்தில் இருப்பது உண்மை.
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை.

நடைவேறுபாடுகள்:
ஈண்டு நடை எனும் சொல் எழுத்து நடை, பேச்சு நடை இரண்டையும் குறிக்கும். தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் எழுத்து நடையும், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும் அறிஞர் மு.வ.வின் எழுத்து நடையும் இலக்கணம் பிறழாத இலக்கியமாகத் திகழ்தலின் இவற்றையும், இவை போல்வன பிறவற்றையும் இலக்கிய நடை எனலாம். இப்போது நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளி பரப்பப்படும் பல புராண, இதிகாச மொழிபெயர்ப்புத் தொடர்களில் அமைந்த உரையாடல்கள் இலக்கிய நடையாக இருப்பதைத் கேட்கலாம். தம் அறிமுகம்? (நீங்கள் யார் என்று பொருள்?) ""தாம் வந்துள்ள நோக்கத்தை நாமறிவோம். ஆயினும் அது நிறைவேறக் கூடுமா என்பது ஐயமே'' இப்படித் தொடர்வதைக் கேட்டுப் பாருங்கள். (இம்மொழிபெயர்ப்பு உரையாடல் சிற்சில இடங்களில் பொருத்தம் இன்றி இருப்பதும் உண்டு)

மராத்தி எழுத்தாளர் காண்டேகரின் பற்பல புதினங்களைத் தமிழில் தந்துள்ள கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் எழுத்து நடை இயல்பாக இருக்கும். கல்கியின் வரலாற்றுப் புதினங்களின் நடையும், தீபம் நா.பார்த்தசாரதியின் நடையும் இயல்பான இலக்கிய நடைத் தமிழே. இந்நாளில் உரை வீச்சுகளும், குறும்பா எனும் ஒன்றும் மற்றும் பல எழுத்துகளும் இலக்கியம் என்றே பேசப்பட்டாலும் இலக்கியம் என்பது இலக்கினைக் (குறிக்கோள்) கொண்டது. வடிவம், கருப்பொருள், வெளிப்பாடு இவற்றில் சிறந்திருப்பதேயாம். மொழிநடைத்தன்மையும் சிதைவின்றிச் சீர்மையுடன் இருத்தல் வேண்டும். வட்டார வழக்கு, சாதிய வழக்குகளை மொழியில் தவிர்த்தல் ஆக்கம் தருவதாகும்.

மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது பேச்சு நடைத் தமிழாம். பேச்சு நடையிலேயே பற்பல பிரிவுகள் உள்ளன. மண்ணின் மணம் கமழ எழுதியுள்ள கி.ராஜநாராயணன் (கரிசல்), தி.ஜானகிராமன் (தஞ்சை) போன்றவர்கள் பேச்சு நடைத் தமிழையே இலக்கியமாக வடித்தவர்கள். புதுமைப்பித்தன், விந்தன் போன்றோரின் தமிழும் இப்பிரிவில் அடங்கும்.

மூன்றாவது ஒன்றுண்டு; அது கொச்சை நடை. பச்சையாகச் சில பல கொச்சைச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதும் பேசுவதுமாகும். அவையல் கிளவி (சபையில் சொல்லக் கூடாத சொற்கள்) கொச்சை வழக்கில் மிகுந்திருக்கும். இதற்கான எடுத்துக்காட்டுகள் வேண்டா என விடுத்திடுவோம்.

இவ்வளவு எதற்காகவெனில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, கொச்சை வழக்கு எனும் மூவகையாலும் தமிழில் பேசவும், எழுதவும் இயலும். ஆயினும் எழுத்தாளர், பேச்சாளர் கடமையாதெனில், கொச்சை வழக்கை விட்டு, பேச்சு வழக்கைக் குறைத்து, இலக்கிய வழக்கில் பிழையின்றி எழுதுவதும், பேசுவதும் ஆகும். இது பிற்காலத் தமிழ் மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு என்றும் வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

அவர்கள் வந்துவிட்டார்கள்.
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைக் கீழ்காணும் பேச்சு வழக்குகளிலும் கேட்டிருப்பீர்கள்.
அவுங்க வந்துட்டாங்க. காத்துக் கொண்டிருக்காங்க
அவொ வந்திட்டாவொ காத்திட்டிருக்காவொ
அவா வந்திட்டா காத்திண்டிருக்கா
ஒரே பொருள் தரும் எத்தனை வகையான பேச்சுமுறைகள் நம்மிடம் உள்ளன பார்த்தீர்களா?

அவ்விடத்தே அல்லது அங்கே என்பதை அங்கிட்டு, அந்தாண்டே, அங்ஙனே என்பதுவும், அதற்காக என்பதை அதுக்கொசரம் என்பதும் என்னென்று சொல்வது என்பதை என்னன்னு சொல்லறது?, என்னென்டு சொல்லறது? என்பது போன்ற பேச்சு நடைகள் பல உண்டெனினும் இயன்றவரை திரிபு இல்லாத சொற்களையே கொள்ளுவோமாக.

திரிபு என்றால் எப்படி? ஐயம் தோன்றலாம்.
ஒரு சொல் - ஒரே ஒரு சொல் காட்டுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.
இருக்கிறது என்னும் சொல்லை இருக்குது என்பார் மதுரை மக்கள். இருக்கு என்பார் தஞ்சைக்காரர். கீது என்பார் சென்னை மக்கள் (சிலர்). இப்படிச் சொல் திரிபு அடைவது மொழிக்குத் தீங்கு என அறிக.

புத்தகம் தமிழ்ச்சொல்லே; புஸ்தகத்தின்று பெற்றதன்று என்று ஓர் அன்பர் மடல் விடுத்துள்ளார். தமிழ்ச் சொல்லை, வடசொல் என்று எழுதுவதில் எமக்கென்ன மகிழ்ச்சி? வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்தே தமிழில் கலந்து விட்டன என்பதைத் தொல்காப்பியம் கொண்டே நாம் அறியலாம். இதுபற்றி விரிவாக முன்னரே எழுதியிருக்கிறோம். அன்பர் காட்டியுள்ள பொத்தகம் (பெருங்கதை- 9 ஆம் நூற்றாண்டு), புத்தகக் கவளி (பெரியபுராணம்- 12 ஆம் நூற்றாண்டு) எல்லாம் பிற்கால நூல்கள். நம் தமிழில், நற்றமிழில் நூல், ஏடு, சுவடி எனப் பல சொல் இருக்கப் புத்தகம் தமிழே என்பதில் என்ன தனிப்பெருமை? சங்க இலக்கியங்களுள், திருக்குறளில் - வேறு பழைய இலக்கிய இலக்கணத்துள் புத்தகம் உண்டா?

புதன்கிழமை எனும் பெயரை அறிவன் கிழமை என்கிறோம். புதன் - புத்தி - புத் வடசொல் என்பதால். புஸ்தகம் - தமிழ் ஒலி பெற்றுப் புத்தகம் ஆயிற்று என்றால் அன்பர் ஒருவர் மறுக்கிறார். போந்து, போத்து, ஒகரம் உகரமாதல் என்கிறார். போ -பொ எனக் குறுகவும் ஓ - உ ஆகவும் விதி (நூற்பா) என்ன? விடுங்கள் ஐயா, புத்தகம் எனும் சொல்லை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லையே. புத்தகம் என்பது பொதுப்படையானது. நூல் என்பது இலக்கணம் பற்றியது என்று வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.

"புஸ்தகம் ஹஸ்த பூஷணம்' - இது முற்றிலும் வட சொற்களால் ஆன தொடர் (பழமொழி). புத்தகம் கைக்கு அணி என்பது பொருள். நூலோர் மரபு என்றும், நூலோர் முடிவு என்றும், நூலிற்கு அழகு என்றும்
"நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்' என்பதும் போன்ற பழமையான சான்றுகள் தமிழில் புத்தகம் எனும் சொல்லுக்கு இல்லை என்பதே நம் முடிவு.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 42:-

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஊர் திருவெறும்பூர் ஒரு சிவத்தலம். "பெல்' புகழ்மிகு ஆலை அருகில் அமைந்திருப்பதால் மேலும் பெருமை பெற்றது இவ்வூர். ஆயினும் இவ்வூரின் பெயரை திருவரம்பூர் என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். வரம்பு என்றால் எல்லை, இஃதென்ன எல்லை அறுக்கப்பட்ட ஊரா? திரு எனும் மங்கலச் சொல் எதனைக் குறிக்கிறது?

இது திருவரம்பூர் அன்று; திருவெறும்பூர் (திரு+எறும்பு+ஊர்) எறும்பு ஒன்று சிவனை வழிபட்டு முத்தி பெற்ற தலம் இது. திரு என்னும் மங்கலச்சொல் தலப் பெயரில் இணையும் என்பதை அறிவீர்கள். ஆதலின் எறும்பூர், திருவெறும்பூர் ஆயிற்று.

தஞ்சை மாவட்டத்தில் மறவர்க்காடு என்ற ஊர் உள்ளது. இதனை இந்நாளில் மரவக்காடு என்று பிழையாகச் சொல்கிறார்கள். வீர மறவர்கள் வாழ்ந்த (ஊர்) வெறும் மரங்களின் காடாக மாறிவிட்டதா?

அபிராமபுரம் சென்னையில் உள்ளது என அறிவோம். அபிராமம் எனும் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் இருக்கிறது. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த பசும்பொன் எனும் சிற்றூர் அபிராமத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்து அபிராமம் செல்ல வேண்டிய மடல்தனை கவனக் குறைவால், அபிராமபுரம் என்று எழுதிவிட்டால் மடல் சென்னைக்கே வந்துவிடும். அபிராமம் எனில் மிக அழகு என்று பொருள். (ராம - ராமன் - ரம்மியமாக இருப்பவன்) அபிராமத்தில் இறுதியில் "அம்' விகுதி உள்ளது. அபிராமபுரத்தில் புரம் எனும் ஒட்டுச் சொல் இணைந்துள்ளது.

ஒரு புதிய சொல்
வணிக நிலையங்களின் பெயர்களைத் தமிழில் எழுத வேண்டும் என்ற கட்டாயம் சென்னையில் சில திங்கள் முன்னர் நிகழ்த்தப்பட்டது. அதன் விளைவாகப் பல விளம்பரப் பலகைகளில் தமிழ் விளையாடுகிறது. மிட் நைட் மசாலா என்றொரு உணவு விடுதியின் தமிழ்ப் பெயர் நள்ளிரவுக் கதம்பம். நள்ளிரவு சரி, கதம்பம் எப்படி? பல மலர்களின் சேர்க்கையைக் கதம்பம் என்போம். பல்வகை உணவுகளையும் கதம்பம் என்றாக்கியுள்ளனர்.
என்றாலும் மசாலாவின் காரசாரம் இதில் இல்லை.

அழகாக ஒரு சொல். அறைகலன் என்று ஓரிடத்தில் பார்த்தோம். அணிகலன்கள் நமக்குத் தெரியும். உடம்பில் அணிந்து கொள்ளும் ஆபரணங்களே அவை. (ஆபரணம் - நல்ல தமிழில், அணிகலன்) அறைகலன் என்பது என்ன? அறையை - கூடத்தை அழகு செய்வது அறைகலன். அஃதாவது ஃபர்னிச்சர் என்ற ஆங்கிலச் சொல்லை அறைகலன் என்றாக்கியது நன்று.

பழமுதிர் சோலை - பழமுதிர்ச்சோலை?
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஓரிடம் பழமுதிர் சோலை. மதுரை அருகில் அழகர்கோவில் மலையில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பழச்சாறு விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றுக்குப் பெயராகப் பழமுதிர் சோலை என்றும் பழமுதிர்ச்சோலை என்றும் பெயரிட்டுள்ளார்கள். உதிர்த்த (பறித்த) பழங்களைக் கொண்டு சாறு பிழியும் இடங்கள் பழமுதிர் சோலைகளா? பழம் + உதிர்+ சோலை என்றால் பழங்கள் உதிர்கின்ற (கொட்டுகின்ற) சோலை என்று பொருள். பழம் + முதிர்+ சோலை என்றால் பழங்கள் முற்றிய (முதிர்ந்த) சோலை என்று பொருள். முற்றினால்தானே பழம்?

இரு தொடர்களில் உள்ள வேறுபாடு எழுத்தில் ஒரு "ச்' மட்டுமே. பழமுதிர்ச்சோலை என்று வல்லொற்று மிக்கு வந்தால் முதிர்ந்த சோலை. பழமுதிர்சோலை என்று (ஒற்று மிகாமல்) இயல்பாக வந்தால் பழம் உதிரும் சோலை என்று பொருள். இரண்டும் பெரிதும் வேறுபாடு இல்லாத ஒரு பொருளையே சுட்டுகின்றன. ஆனால் பழச்சாறு நிலையங்களுக்கு இந்தப் பெயர் எப்படிப் பொருந்தும்? எல்லாம் ஓர் அழகு (ஈர்ப்புக்காக) என்று கொள்வோமே.

சொல்லருமை:
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது நூற்பா. தமிழ்ச் சொற்கள் பலவும் அவற்றின் பொருளை உணர்த்தும் அழகு வியக்க வைப்பது. தறி என்பது நெசவு செய்யப் பயன்படும் கருவி. இந்தத் தறியில் நீளமாக நெய்து வேண்டிய அளவில் வெட்டி எடுக்கப்பட்டதே வேட்டி என்பது. வேட்டியிலும் சிறிதாகத் துண்டு செய்யப்பட்டது துண்டு ஆகும். ஆக வேட்டி, துண்டு என்பவை காரணப்பெயர்களாய் அமைதல் காண்க. சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலிருந்து வந்தவைபோல் தோற்றம் தருவதுண்டு. வேட்டி எனும் சொல்லைச் சிலர் வேஷ்டி என்றனர். இதைப் பார்த்து நுட்பம் தெரியாமல் வேஷ்டிதான் வேட்டியாயிற்று என்றுரைத்தல் பிழை.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 43:-

கச்சை, கச்சு என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். "கச்சை வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டான்' என்று பேசுகிறோம். இடை (இடுப்பு) ஆடைதான் கச்சை. "நீலக்கச்சை பூவார் ஆடை' என்பது சங்க வரி. கச்சு பெண்கள் மார்பில் கட்டுவது. இக்காலத்து "பிரா' போன்றது. பழைய புராண வரலாற்றுப் படங்களில் இப்படியொரு ஆடையைக் காணலாகும். "கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று பாடினார் பாரதியார். "நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை' என்று கச்சைக்கு நச்சை (நஞ்சு - விடம்) எதுகையாக்கிப் பாடினார் மகாகவி.

மீண்டும் ஒருமை பன்மை மயக்கம்
"வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன' என்று செய்தியாளர் தொலைக்காட்சியொன்றில் படித்தார். எண்ணிக்கை, நடைபெறவுள்ளது என்று ஒருமை முடிவுதான் சரியானது. பல தொகுதிகள் என்பதால் உள்ளன என்று பன்மையில் முடித்தாரா? அப்படிக் கருதினால் தவறு.
மற்றொரு செய்தி அறிக்கையில்,"அவற்றுக்கு இறுதி முடிவு ஏற்படமாட்டா' என்று செய்தியாளர் படித்தார். முடிவு என்னும் சொல்லுக்கு ஏற்ப, மாட்டாது என்றே முடித்திட வேண்டும். அவற்றுக்கு எனும் பன்மை கருதி மாட்டா என்று பன்மை முடிவு கொடுத்தார் என்று கருதுகிறோம்; இதுவும் பிழையே.

வினை முற்று (முடிக்கும் சொல்) பொருளுக்கு ஏற்ப அமைத்தல் வேண்டும்.
"திருத்தேர் இன்று நிலைக்கு வாராது (வராது)' - இஃது ஒருமை.
"பூனைகள் இங்கு வாரா (வர மாட்டா)' } பன்மை
"ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்' (ஒருமை)
"கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன' (பன்மை)
"வழுக்கு மரம் முதலிய வீர விளையாட்டுகள் பயிற்சி முகாமில் நடைபெற்றது'
இங்கு விளையாட்டுகள் நடைபெற்றன என்று பன்மையில் முடித்தல் வேண்டும்.

"தமிழகத்தின் பல பாகங்களில் வெப்பநிலை கூடியே காணப்பட்டன'
வெப்பநிலை கூடியே காணப்பட்டது என்பதே சரி. பல பாகங்களில் என்பதை மனதில் நினைத்து இப்படி முடித்தார் போலும்.
இந்தக் குழப்பம் எல்லாம் சற்றே நினைத்துப் பார்க்க அகன்று போகும். சரியாக இருக்க வேண்டும் என்னும் அக்கறையை மனத்தில் கொள்ள வேண்டும். இது நம் பரிந்துரை. "ஆமாம் ஐயா, எல்லாம் என்று தொடங்கி போகும் என முடித்துள்ளீர்கள். சரியா?' சரியே. அது போகும் } அவை போகும் } ஒரே சொல்தான்.
சொற்றொடர் (வாக்கிய) வகைகள்
வாக்கிய அமைப்பில் கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பைப் பொறுத்து ஒருவகையாகவும் இரண்டு கூறுகளைக் காண்போம். முதலில் கருத்து வாக்கியம் என்பதுள் அடங்கும் பிரிவுகள் பற்றி அறிவோம்.

1. ஒரு செய்தியை உணர்த்துவது செய்தி வாக்கியம்.
(எ-டு) உழைத்தால் வாழ்வில் உயரலாம்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் ஆட்சி நிலைக்காது. ஈண்டு செய்தி - நியூஸ் - அன்று; ஒரு கருத்து எனக் கொள்க.

2. எதுபற்றியேனும் யாரிடமேனும் வினவுகின்ற வகையில் அமைவது வினா வாக்கியம்.
(எ-டு) மாநாட்டுக்கு நீ போய் வந்தாயா?
நாளை கல்லூரிக்கு அவர் வருவாரா?

3. நமது விருப்பத்தை - விழைவை - வெளிப்படுத்தும் தன்மை கொண்டது விழைவு வாக்கியம்.
(எ-டு) வாழிய பாரதத் திருநாடு
வாழிய செந்தமிழ்- (வாழ்த்து)
நாளை எமதில்லம் வருக - (வேண்டுகோள்)
உனது சான்றிதழ்களைக் கொண்டு வா - (கட்டளை)
கயவன் அழிக - (ஆற்றாமை } சபித்தல்)

4. நமது உணர்ச்சியைப் புலப்படுத்தும் வண்ணம் அமைவது உணர்ச்சி வாக்கியம்.
(எ-டு) நீயே போன பின் நான் மட்டும் இருந்தென்ன!
முத்தமிழ்த்துறையில் முறைபோகிய வித்தக வருக!

! இப்படி ஒரு குறியிட்டால், இதனை ஆச்சரியக்குறி என்பார்கள். ஆச்சர்யம் (வியப்பு). வியப்பு மட்டுமன்று; எத்தகைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ! இக்குறி இடப்படுதலின் இதை உணர்ச்சிக்குறி எனல் தக்கது.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 44:-

அமைப்பு வகைப் பிரிவுகள்:-
தமிழில் மிக நெடிய சொற்றொடர்கள் அமைத்துப் பேசுவோர், எழுதுவோர் உள்ளனர்.

இறையனார் களவியல் (அகப்பொருள்) உரை என்னும் நூலில் ஒரு பக்கம், இரண்டு பக்கம் அளவுக்கு ஒரு சொற்றொடர் நீண்டு செல்லும்.

குறிஞ்சி நில வருணனை உரையை ஓரிரு மணித்துளியளவுக்கு அடுக்கிப் பேசும் பேச்சாளர்கள் உள்ளனர்.

இவற்றுள் வாக்கியம் முடிவு இன்றித் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தவர், தம் மேடை பேச்சு சொற்றொடர் முடிவு இன்றிப் போய்க் கொண்டே இருக்கும். எங்கே முடிப்பார்? எப்படி முடிப்பார் என்று எவருக்கும் தெரியாது. இந்தப் போக்கு அவ்வளவாக இப்போது இல்லை. மாற்றிக் கொண்டனர் தம் பேச்சை.
இங்கு நாம் எழுத நினைப்பது மேற்கண்ட செய்தி பற்றியன்று.
ஆங்கிலத்தில் வாக்கிய வகைகள் இருப்பதுபோல் தமிழில் அமைப்பு முறையில் வாக்கிய வகைகள் உள்ளனவா என்பது பற்றியே சிந்திக்கலானோம்.

கீழ்வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
1. கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதினார்.
2. திருவள்ளுவர் திருக்குறளையும், சேக்கிழார் பெரியபுராணத்தையும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் இயற்றினார்கள்.

முதல் வாக்கியத்தில் கம்பர் எனும் எழுவாய் எழுதினார் என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. (ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தது)

இரண்டாம் வாக்கியத்தில் பல எழுவாய்கள் ஓரே பயனிலை கொண்டு முடிந்துள்ளன.

இவ்வாறு ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம் (ஆங்கிலத்தில் simple sentence) இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்.
1. பொருளீட்டல் மட்டுமே வாழ்வின் குறிக்கோளன்று; அறநெறி பிறழாமையும் வேண்டும்.
2. வாழ்க்கை என்றால் நன்மைகளும் உண்டு; அதேபோல் தீமைகளும் வருவதுண்டு.
3. அவன் வேலையை ஒழுங்காகப் பார்ப்பதில்லை; அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
4. காலையில் கதிரொளி எங்கும் பரவிற்று; கவ்வியிருந்த பனிப்படலம் நீங்கிற்று.
5. உண்ணும் உணவு அளவாக இருத்தல் வேண்டும்; உடம்புக்கு ஒவ்வும் வகையில் இருத்தல் வேண்டும்; ஊட்டமும் சத்தும் உடையதாக இருத்தல் வேண்டும்.
இப்படிப் பற்பல காட்டுகளை எழுதிக் கொண்டே போகலாம்.

இவை தொடர் வாக்கியம் எனும் வகையின் பாற்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவை ஏதோ ஒரு வகையில் இணைக்கப் பெற்றுத் தொடர்வது இது. "ஆகையால், ஏனெனில், அதனால், எனினும், இருப்பினும்", போன்ற சொற்களால் இவை இணைக்கப்படலாம்.
தனித்தனியே பல வாக்கியமாயினும் கருத்துத் தொடர்பால் ஒரு வாக்கியமாதலே தொடர் வாக்கியம் எனப்படுவது (ஆங்கிலத்தில் compound sentence). ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது இவ்வகை என்றும் குறிப்பிடலாம்.

இனி வேறு ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
1. மொழிப்பற்று மட்டும் இருந்தால் போதாது என்றும் மொழியைத் திருத்தமாய்ப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் அறிஞர் கூறுவர்.
2. திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைக் காணவில்லை என்றதும் தாயானவள் பதறித் துடித்தாள்; அலறினாள்; காவலரிடம் முறையீடு செய்ய ஓடினாள்.

இவ்விரு வாக்கியங்களும் தொடர் வாக்கியங்கள் போலவே கருத்தால் தொடர்ந்து செல்கின்றன. ஆனால் ஒரு செய்தி முதன்மையாகவும் மற்றவை அதைச் சார்ந்தும் வருவதைப் பார்க்கிறோம்.

அறிஞர் கூறுவர் என்பது முதன்மையானது.
"போதாது, பயிற்சி பெற்றிருப்பது", என்பவை சார்ந்து வருபவை.
தாய் முறையீடு செய்ய ஓடினாள் என்பது முதன்மை வாக்கியம், திருவிழாவில் "காணாமற் போனதும், அலறித் துடித்ததும்", சார்புநிலை வாக்கியங்கள். எல்லாம் இணைந்து ஒரே வாக்கியம் ஆகியுள்ளமை காண்க.

இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளையும் கலவை வாக்கியம் (ஆங்கிலத்தில் complex sentence) எனச் சொல்லலாம்.
சுருக்கமாகச் சொன்னால் ஓர் எழுவாய் அல்லது ஓரிரு எழுவாய் ஒரே பயனிலை கொண்டு முடிவது "தனிநிலை வாக்கியம்".
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம். பல எழுவாய்கள் பல பயனிலைகள் கொண்டு முடிவது "கலவை வாக்கியம்".

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 45:-


உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரத்துக்கு ஒரு பெயருண்டு. அதனால் உரைநடை சங்கச் சார்புக் காலத்திலேயே தமிழில் தோன்றிற்று. இறையனார் களவியலுரையும் பழந்தமிழில் உள்ள உரைநடை. அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை, சேனாவரையர் உரை என்றெல்லாம் பழந்தமிழ் உரைநடைகள் பல உண்டெனினும், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே தமிழில் உரைநடை வளர்ச்சி பெற்றது. உரைநடையில் புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவும் தோற்றம் பெற்றன. ஆதலின் வாக்கிய அமைப்புப் பற்றிய செய்திகள் ஆங்கில மொழியைத் தழுவியே ஈண்டு எழுதப்பட்டுள்ளன.
ஈண்டுரைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள் பல இந்நாளில் சிதைவுற்றுப் போயின. தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் இரண்டும் இணைந்த தொடர் கலவை வாக்கியங்கள் நிரம்ப எழுத்துகளில் வந்துவிட்டன. பொதுவாகச் சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்து எழுதுதல் நல்லது. மிக நீண்ட வாக்கியங்கள் படிப்பவர்க்குக் குழப்பத்தையும் மலைப்பையும் உண்டாக்கக்கூடும்.

எழுத்தாளர் சிலர், "எப்படி எழுதினால் என்ன? பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுத வேண்டுமா?' என்று பேசி வருவது நன்றாகாது. பல்லுடைக்கும் தமிழ் எங்குள்ளது? எவர் அறிவார்? தமிழ் எழுத வராதவர்கள் தாம் தப்பித்துக் கொள்ளச் செய்கின்ற வாதம் இது. ஆங்கில நாளிதழ்களில் மொழியறிவு, புலமை இல்லாதவர் எழுத முடியுமா? பிழையான ஆங்கிலத்தைத் தமிழர்கள் ஏற்பார்களா? தமிழ் என்றால் மட்டும் ஏனோ புறக்கணிப்பு?

உரை வகை நடை என்னும் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. செய்யுளியலில் "பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்று எழுந்த கிளவியானும்... எனத் தொடங்கி உரைவகை நடை நான்கு என மொழிப' என்றார் தொல்காப்பியர். பாட்டின் உரைக்குறிப்புகள், பாக்கள் அல்லாது தோன்று சொல்வகையாக உலக வழக்கில் நிகழும் உரையாடல் என்று பலவாறு விளக்கம் தரப்படுகிறது. ஆயினும் முற்றிலும் இஃது உரைநடைத் தமிழ் பற்றிய செய்தி ஆகாது. உரையாப்பு வகை என்று இது குறிக்கப்படுகிறது. விரிவு விரும்புவோர் தொல் - நூற்பா 1429 ஐ காண்க. கிளவி - சொல்.

தமிழின் சீர்மை

தமிழகத்தில் இயற்கையாய் இருக்கும் அனைத்துப் பொருளுக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. கருவிகளுக்கும், பண்டங்களுக்கும் சொற்கள் உள்ளன. சொற்பெருக்கம் உடைய மொழி நம் தமிழ். மிகப் பழங்காலம் தொட்டு, நம் நாட்டிற்குப் புதிதாக வந்தவற்றுக்கு எப்படிப் பெயர் அமைத்தார்கள் எனச் சில காட்டுகள் வழியாகக் காண்போம்.

குதிரை பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருக்கவில்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் புதிதாக வந்தபோது அது குதித்துக் குதித்து ஓடுவது கண்டு தமிழர்கள் அதற்குக் குதிரை எனப் பெயரிட்டனர்.

நம்நாட்டில் மிளகு இருந்தது. கார்ப்புச் சுவைக்கு (காரம்) இதனையே பயன்படுத்தி வந்தோம். உடல் நலனுக்கும் ஏற்றதாய் இருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு காய் புதிதாய் வந்தது. அது கார்ப்புச் சுவை கொண்டது. அதனால் முன்னிருந்த மிளகை அடிச்சொல்லாகக் கொண்டு மிளகாய் என்று புதிய சொல்லை உண்டாக்கினர்.

பலவகை இலைகள் நம் நாட்டிலே உண்டு. புதிதாக ஓர் இலை இறக்குமதியாயிற்று. அந்த இலையைப் பயன்படுத்திப் புகை வரச் செய்து பயன்படுத்தினார்கள். புகைவரக் கூடிய இலையைப் புகையிலை என்று சொல்லலாயினர்.

தட்டச்சு, பேருந்து, தொடர்வண்டி, நடைமேடை, அலுவலகம், கணினி, குறுஞ்செய்தி, குறுவட்டு, மின்னஞ்சல், முகப்பக்கம், இணையதளம் என்பனபோல் நூற்றுக்கணக்கான சொற்கள் காலந்தோறும் தமிழில் உருவாகி வந்துள்ளன; வருகின்றன.

இப்போது புதிதாகத் தமிழ்ச்சங்கமம், இசைச் சங்கமம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சங்கமம் என்பது வடசொல். கூடல் என்பதே தமிழ்ச் சொல். மூன்று ஆறுகள் சேருமிடம் "திரிவேணி சங்கமம்' என்பதைத் திருமுக்கூடல் என்றே தமிழர் சொல்லி வந்தனர். கூடலுடன் ஒரு "திரு' சேர்த்துக் கொண்டால் சொல்ல அழகாய் இருக்கும். இலக்கியத் திருக்கூடல் எப்படி?

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 46:-


(19.6.2011) பெங்களூரு நாகராசன் என்பவர் "வேட்டி' எனும் சொல் பொருளை மறுத்து எழுதியுள்ளார்.


எல்லாத் துணிகளும் தறியில் நீளமாகத்தான் நெய்யப்படுகின்றன என்ற அவரது கருத்தே தவறு. விசைத்தறிகளில், இன்றைய துணி ஆலைகளில் அப்படிச் செய்யப்படலாம். கைத்தறியில் அதுவும் பழங்காலத்தில் நான்கு முழ வேட்டிகள் நான்கை ஒன்றாக நெய்து பின் வெட்டி எடுப்பார்கள். நான்கு கொண்டது ஒரு மடி. புடைவை ஒவ்வொன்றாகத்தான் கைத்தறியில் நெசவு செய்தனர். புடை என்பது பக்கம்; புடைவை உடலின் எல்லாப் பக்கமும் சுற்றிக் கட்டப்படுவது. சிறிதாகத் துண்டித்து எடுத்து துண்டு ஆக்கினர் என்றோம். "வேஷ்ட' வேட்டி என்றாயிற்று எனில் துண்டு எப்படி வந்தது என்று அவர் ஏன் எழுதவில்லை?


ஜவுளி வர்த்தகம் என்பதை அறுவை வணிகம் என்பர் தமிழறிஞர். அறுவை (அறுக்கப்படுதல்) ஜவுளியின் தமிழ்ப் பெயர். வேட்டி, துண்டு, அறுவை எல்லாம் முன்னரே அறிஞர்கள் கண்டு சொல்லியவை. எமது புதிய கருத்துகள் அல்ல.

பிரபலமானவர்களின் முகவரி என்று புத்தகம் வெளியிடுகிறார்கள். பிரபல நடிகர், பிரபல தொழில் மேதை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தப் பிரபலம் தமிழா? இல்லை! பிரபலமானவரை, புகழ்பெற்றவர் என்று சொல்லலாம். மிக உயர்ந்த புகழ் உடையவராயின் "மீப்புகழ்' என்னும் அடைமொழி சேர்த்தல் போதுமானது. (மீ - மேலான)

பிரமுகர் என்ற சொல்லும் நம் பயன்பாட்டில் உள்ளது. தனித் தமிழில் பேசும் இயல்புடையவரும் பிரமுகர் என்றுரைப்பது கேட்டுள்ளோம். பிரமுகர் எனும் சொல்லும் வட சொல்லே. ஓர் உயர்ந்த இடத்தை, மதிப்பை மக்களிடம் பெற்றிருப்பவரையே பிரமுகர் என்போம். மேன்மையர் என்று தனித் தமிழில் சொல்லலாமே! (சில பிரமுகர் மேன்மையர் எனும் சொல்லுக்குப் பொருந்தாதவராய் இருக்கலாம்; இருக்கட்டுமே. நடக்க முடியாத ஒருவர்க்கு நடராசன் என்று பெயர் இல்லையா?)

தமிழில் பெயர்கள் அமைந்த வகை வியப்பூட்டுவதாக இருக்கிறது. அடுதலுக்கு (அடுதல் - சமைத்தல்) உரியது அடுப்பு. பாம்புகள் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டு அணைத்து இன்புறும் என்பர். அன்புடன் தழுவி வாழ்தல் என்பதை நம் தமிழ் அரவணைத்தல் என்று சுட்டுகிறது. (அரவு - பாம்பு)

ஒருவர் உயரத்தில் சரி பாதியாக இருப்பது இடுப்புப் பகுதியாகும். ஆதலின் இடுப்பை அரை என்றனர் (அரைஞாண் - இடுப்புக் கயிறு)

அறுத்தல் எனும் சொல்லிலிருந்து ஆறு எண்ணம் சொல் வந்தது. நிலத்தை அறுத்துக் கொண்டு நீர் ஓடுவது ஆறு எனப்பட்டது. அப்படி ஓடும் ஆறு ஒரு வழியை உண்டாக்கிவிடும். அதனால் ஆறு என்பதற்கு வழி (பாதை) என்ற பொருளும் உண்டு. (ஆற்றுப்படை - வழிப்படுத்துதல்)

வீட்டில் பல பகுதிகள் உண்டு. அப்படிப் பகுதி பகுதியாக அறுக்கப்பட்ட (பிரிக்கப்பட்ட காரணத்தால்) அறை என்னும் சொல் வந்தது. (சமையலறை, படுக்கையறை)

பெரிய கட்டையைப் பிளப்பதற்கு இடையில் திணித்து அடிக்கப்படுவது ஆப்பு. ஆழ்+பு என்பது ஆப்பு ஆயிற்று.

எல்லாப் பொருளிலும் இடத்திலும் தங்கி (உறைந்து) இருப்பவன் இறைவன் (இறை - தங்குதல்)

உயிருக்கு உடைபோல் அமைந்திருப்பதால் உடம்பு. உள்ளுதலுக்கு இடமாக இருப்பதால் உள்ளம். (உள்ளுதல் - நினைத்தல்). மக்களால் உண்ணப்படும் நீரையுடையது ஊருணி (ஊர் + உணி)

எள்+நெய் - எண்ணெய் ஆயிற்று. இக்காலத்தில் பொருள் மாறி எண்ணெய் பலவகைப் பொதுப் பெயர் ஆகிவிட்டது.

ஏர்த் தொழிலுக்கு (உழவுக்கு) உதவுவது எருது. ஒத்து இருக்கும் வகையில் அமைவது ஒத்திகை (நாடக ஒத்திகை)

கோள் - கொள்ளுதல் என்னும் பொருளது. இதற்கு வலிமை என்றொரு பொருளும் உண்டு. வீட்டில் வளரும் நாய் அறிவோம். கோள் + நாய் - கோணாய் என்பது ஓநாய் என மருகியது; இது காட்டில் இருப்பதாம்.

கடப்பதற்கு அரியது என்னும் பொருளுடையது கடல். சாலையின், வீதியின் கடைசியில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது கடை (விற்பனை அகங்கள்). யானை, கரிய நிறமுடையதாக இருப்பதால் அதற்குக் கரி என்ற பெயர் உண்டு. எல்லாவற்றையும் காணும் இடமாக இருப்பதால் கண் (கண் - இடம்).

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 48:-



எழுதிவரும்போது இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதுவதைக் காட்ட (.....) தொடர் விடுபாட்டுக் குறியிடல் வேண்டும்.

ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும்.

ஒரு வாக்கியத்தில் அமைந்த சொற்களுக்கு இடையே - விளக்கம் தரும் வகையில் வேறொரு சொல் இடைப்பட வரும்போது இடைப்பிறவரல் குறி (-......-) இடல் வேண்டும்.

(எ-டு) நீ எப்போதும் வெற்றி பெறுவாய் - நேர்மையாக நடந்தால் - என்பதை மறவாதே.

ஒரு சொல்லுக்கு விளக்கம் தர வேறொரு சொல் எழுதப்பட்டால் சிறுகோடு (-) இடப்படுதல் வேண்டும்.

(எ-டு) அந்தக் காட்சி அளவிடற்கரிய வியப்பை - ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

அது அவன் மனதில் பசுமையாக - அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

அடைப்புக்குள் எழுதப்படும் செய்திகளுக்குப் பிறைக்குறி இட வேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிக்கும் மேல் பகர அடைப்பு ள ன வருதலும் உண்டு.

விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இட வேண்டும்.

உணர்ச்சிக்குறிகளைப் போட்டு எழுதுதல் பிழை. இராமா, முருகா, நண்பா, அண்ணா என்பதுபோல் வர வேண்டும். இராமா! முருகா! நண்பா! அண்ணா! என்றெழுதிட வேண்டா.

மாற்றமும் மகிழ்ச்சியும்
நமது செய்தி ஏடுகளில் பல்லாண்டுகளாக எழுதப்பட்ட கருப்பு எனும் சொல் இப்போது கறுப்பு எனச் சரியாக எழுதப்படுகிறது. இயக்குனர் எனும் தவறான சொல்லும் இயக்குநர் என்று சரியாக எழுதப்படுகிறது. தொலைக்காட்சி எழுத்துகளிலும் இம்மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் மேலாக, ""உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும்'' என்ற வாக்கியத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

"கஷ்டமான வேலையாகிவிடும்' என்பதுதான் நடைமுறையில் இருந்தது. வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது என்பதைப் பார்த்தபோதும் மகிழ்ச்சியே. பதட்டம் என்றே எழுதிவந்தார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. வன்முறை நிகழ்வுகளால் (சம்பவங்களால்) என்று எழுதியிருப்பின் இன்னும் சிறப்புடைத்தாகும்.

"குழந்தையின்மைக்குக் காரணிகள் என்ன?' ஏதோ ஒரு விளம்பரத்தில் படித்ததாக நினைவு. எவை என்னும் பன்மைச் சொல்லைப் பொதுவாகப் பலரும் மறந்துவிட்டோம். "விலைவாசி உயர்வுக்குக் காரணங்கள் என்ன?' " ஊழல் பெருகிவிட்டதன் அடிப்படைகள் என்ன?' என்றே பலகாலும் கேட்க நேர்கிறது. பன்மையில் "கள்' ஈறு பெற்று வரும்போது எவை எனச் சொல்ல வேண்டும் என்பதை மறக்கலாமா? அடிப்படை என்ன? என்றால் போதுமே. அடிப்படைகள் என்று தேவையின்றிக் "கள்' விகுதி ஏன்?

ஓர் ஐயமும் விளக்கமும்
செய்தி ஏடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது என்று எழுதுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஆர்ப்பு என்றால் ஒலித்தல் (ஓலி). ஆட்டம் என்பது ஆடுவது. கறுப்புக் கொடிக்கும் ஒலித்து ஆடுவதற்கும் என்ன தொடர்பு? இவ்வாக்கியம் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றிருந்தால் சரியாயிருக்கும். ஆர்ப்பாட்டம் என்பதும் தொடர் முழக்கம் (கோஷம் போடுதல்) என்பதையே குறிக்கிறது போலும்! எப்படியோ நம்மவர்க்கு இத்தொடர் நன்கு பழகிவிட்டது.

புறமும் புரமும்
நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொன்னால் நன்கறிவோம். கிராமியப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. அண்மையில் ஒரு பாட நூலில் நாட்டுப்புரப் பாடல்கள் என்று அச்சிட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டுப்புரம் என்பதே சரி என்றும் வாதிடுகிறார்களாம் சிலர். புறம் என்பது தூய தமிழ்ச் சொல்; புறநானூறு நாமறிவோம். புறஞ்சேரி இறுத்த காதை சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நாளில் புறநகர் என்று சொல்லுகிறோமே அதுவே புறஞ்சேரி எனப்பட்டது.


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 49:-


நகர்ப்பகுதிக்கு வெளியே அமைந்ததே நாட்டுப்புறம் என்று சொல்லப்பட்டது. அஃதாவது சிற்றூர் (கிராமம்) சார்ந்தவை அவை. அந்த மக்களின் இசை, நடனம் முதலிய கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனப்பட்டன. புரம் என்பது வடசொல். வாழ்விடம் என்னும் பொருள் கொண்டது. புரம் - கோட்டை எனும் பொருளிலும் வரும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்பர் சிவபெருமானை. இந்நாளில் பெரிய நகரங்களின் உள் பகுதிகளுக்குப் புரம் என்று பெயர் அமைத்துள்ளார்கள். (எ-டு) சீனிவாசபுரம், மன்னார்புரம். பெருநகரில் அண்ணாநகர், பெசன்ட் நகர் என்று சொல்லுகிறோமே அதுபோன்றது புரம் என்பதும்.


அந்தநாளில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. (அந்தப்புரம் என்பது பிழை) அந்தர்ப்புரம் என்பதே சரி. (கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க) இச்சொல்லுக்கு உள் வீடு, அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். நாட்டுப்புறத்தோடு - புரத்தைச் சேர்ப்பது பொருந்தாது.

முன்னர் எழுதினோம்: மாறன் - தமிழ்ச்சொல் (பாண்டியன்). மாரன் - வடசொல் (மன்மதன்). ஆதலின் சுகுமாரனைச் சுகுமாறன் என்றெழுதுதல் பிழை என்பதாக. (திருமாறன், நன்மாறன், நெடுமாறன் - நற்றமிழ்ச் சொற்கள்) அதுபோன்றே நாட்டுப்புறம் என்பதை நாட்டுப்புரம் எனல் பிழையேயாகும்.


மீண்டும் மீண்டும் பிழைகள்:

இருபது முப்பது ஆண்டுகள் முன்னர் வெளிவந்த நூல்களில், ஏடு, இதழ்களில் இன்றுபோல் பிழைகள் மலிந்திருக்கவில்லை. கையால் அச்சுக் கோப்பவர் மிகக் கவனமாகத் தம் பணியைச் செய்தார்கள். தமிழில் எழுத்தறிவு, சொல்லறிவு நிரம்பியிருந்தார்கள். அப்படியே பிழைகள் இருப்பினும் பிழை திருத்துவோர் அவற்றைத் திருத்திவிடுவார்கள். அத்தகைய புலமை உடையவர்கள் பிழை திருத்துபவராக இருந்தனர். இதற்கும் மேல் எப்படியோ சில பிழைகள் நூலில் இருந்துவிட்டால் கடைசிப் பக்கத்தில் "பிழையும் திருத்தமும்' ஓர் அட்டவணையிட்டு வெளியிடுவார்கள்.


இந்நாளில் கணினி வழியாக எழுத்துகளைத் தட்டி உருவாக்கும் முறையில் நிரம்பக் கவனக் குறைவு, மொழியறிவு இன்மை, தமிழ்தானே என்னும் புறக்கணிப்பு எண்ணம் ஆகியவை மிகுந்துள்ளன. விளைவு, பிழை மலிந்த ஏடுகள், புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுள்ளன.


ஒரு சிறந்த மனிதரைப் பற்றி எழுதும்போது, "மத்திய அரசு தமக்கு வழங்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்தார்' என்று ஒரு புத்தகத்தில் ஒரு நல்ல எழுத்தாளர் எழுதியிருப்பதைப் படித்தேன். மத்திய அரசால் வழங்கப்படவிருந்த என்றோ, மத்திய அரசு வழங்கவிருந்த என்றோ இருப்பின் இந்த வாக்கியம் பிழையற்றதாகும். இதே புத்தகத்தில் வேறு ஒரு பக்கத்தில் "... நிறுவனத்தில் இவர் வேலைப் பார்த்து வந்தார்' என்றும் இருக்கிறது. வேலை பார்த்தார் என்று ஒற்று (ப்) மிகாமல் எழுதிட வேண்டும். வேலைப் பார்த்தார் எனில் வேல் என்ற கருவியைப் (வேல் +ஐ) பார்த்தார் என்று பொருளாகும். இவ்வாறே வெற்றி பெற்றார் என்பதை, வெற்றிப் பெற்றார் என்றும் எழுதுகிறார்கள்.


பயிர்த்தொழில் என்பது ஒன்று. உழவுத் தொழில் என்றும் உரைப்போம். இந்த உழவுத் தொழில் உலகுக்கெல்லாம் பேருதவியாக (உபகாரமாக) இருப்பதால் இத்தொழிலை வேளாண்மை என்றும் குறிப்பிடுவோம். (வேளாண்மை - உபகாரம் - பேருதவி)

பயறு ஒருவகை உணவுப் பொருள். பாசிப் பயறு, தட்டைப் பயறு, மொச்சைப் பயறு எனப் பல பயறுகள் உண்டு. இந்தப் பயறு என்னும் சொல்லைப் பயிறு ஆக்கக் கூடாது. ஆனால், அரசு விளம்பரம் ஒன்று அரசுத் தொலைக் காட்சியில் வருகிறது. அதில், பயிறு வகைப் பயிர்களுக்கு.... என்று எழுத்தில் காட்டுகிறார்கள். இது பிழை. இவ்வாறே பயிர்களுக்கு என்னும் சொல்லை பயிறுகளுக்கு என்றெழுதுவதும் பிழையே. பயறு வகைப் பயிர் என்பதே சரியானது.


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 50:-

வீணை என்ற சொல்லோடு கலைஞர் எனும் சொல் சேரும்போது "க்' வருமா? என்று ஓர் அன்பர் தொலைப்பேசியில் வினவினார். ஆம். க் வரும் - கண்டிப்பாய் மிக வேண்டும் என்றேன். வீணை (ஐ) உயிர் ஈறு, (க,ச,த,ப நான்கில்) "க' வல்லெழுத்து வருமொழி. வீணையை மீட்டும் கலைஞர் என்று பொருள் விரித்தல் வேண்டும். இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (மீட்டும்) உடன் தொக்க தொகை இது என்றேன்.

அப்படியானால் வீணை என்பதோடு கற்றான் எனும் சொல் சேரும்போது "க்' வருமா? என்றார். "வராது' என்றேன். இங்கும் வருமொழி க - தானே? ஏன் மிகாது? வீணையைக் கற்றுக் கொண்டான். ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மட்டும் தொக்கி வருவதால் வலி மிகாது என்றேன். தமிழ் கற்றான்- தமிழைக் கற்றான்; தமிழ்ப் பேராசிரியர்- தமிழில் வல்ல பேராசிரியர், தமிழைக் கற்ற பேராசிரியர் என்பதும் ஈண்டு நினைக்கத்தக்க எடுத்துக்காட்டுகள்.

சந்தி பிரித்தெழுதல்
பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்புச் செய்பவர் நன்கு பொருள் விளங்க வேண்டும் என்பதற்காக செய்யுள் அடிகளில் அமைந்த சீர்களைச் சந்தி பிரித்து எழுதுகிறார்கள். சந்தி பிரிப்பதால் பொருள் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'

கொழுநற்றொழுதெழுவாள்- கொழுநனை (கணவனைத்) தொழுது எழுவாள் என்று பொருள் தரும் இதனைக் "கொழுநன் தொழுது எழுவாள்' என்று பிரித்து எழுதினால் என்ன ஆகும்? கொழுநன் (கணவன்) வந்து தன்னைத் தொழுதிடப் பின் எழுவாள் அவள் என்று ஆகிவிடும்.

வாள்+தடங்கண்= வாட்டடங்கண்; புல்+தரை= புற்றரை. இதனை வாள்த்தடங்கண், புல்த்தரை என்று எழுதுதல் தவறாம். இவ்வாறே பற்பொடி, கற்கண்டு இவற்றை பல்ப்பொடி, கல்க்கண்டு என்றெழுதுதல் பிழை.

அவற்கு, அவட்கு, அவர்க்கு - இம்மூன்று சொற்களின் வேறுபாட்டை இந்நாளில் பலர் அறியார். அவன்+கு= அவற்கு (ஆண்பால்) அவள்+கு= அவட்கு (பெண்பால்), அவர்+கு= அவர்க்கு (பலர் பால்). அங்கு வந்தவற்கு எனின், வந்தவன் ஒருவன் மட்டுமே. அங்கு வந்தவர்க்கு எனில், வந்தவர் பலராவார். இப்போது நாம் இச்சொல்லை வந்தவர்களுக்கு எனக் "கள்' விகுதி சேர்த்து எழுதிப் பழகிவிட்டோம்.

பொன்+தாமரை= பொற்றாமரை என்று ஆவதைவிட்டு பொன் தாமரை என்று எழுதினால் பொன் வேறு, தாமரை வேறு என்று இருபொருளைக் குறிப்பதுபோல் ஆகிவிடக் கூடும். புணர்ச்சி இலக்கணம் மிக விரிவானதொன்று. சில குறிப்புகளை ஆங்காங்கே தருகிறோம்.

கவிஞர்களுக்கு ஒரு குறிப்பு:
புதுக்கவிதை வாணர் பற்றி நாம் எதுவும் எழுதுவதற்கில்லை. மரபுப் பாவலர்களுள் இருவகையினர் உள்ளனர். யாப்பு இலக்கணம் முற்றிலும் அறிந்து எழுதுபவர்கள் ஒருவகை. இலக்கணம் அறியாமலே மரபுக் கவிதைப் பயிற்சியால் எழுதுபவர் மற்றொருவகை. வெண்பா எழுதுவதற்கு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் கவிஞர் அறிவர். மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை. விளம் முன் நேர், காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை என்னும் இவ்விரு தளையன்றிப் பிற வாரா என்பது ஒருவிதி. அவ்வாறே இறுதியில் நாள் (நேர்), மலர் (நிரை), காசு(நேர்பு), பிறப்பு (நிரைபு) எனும் நான்கு அமைப்பில் ஏற்ற ஒன்றைக் கொண்டு முடிதல் வேண்டும். நாள், மலர் என்பன போல் ஓரசைச்சீர் வரும். ஈரசைச் சீராயின் இரண்டாம் அசை குற்றியலுகரமாக இருத்தல் வேண்டும்.

"தேடு பரம்பொருளாம் தெய்வம்' என்பது போலக் கவிஞர் சிலர் ஈற்றடி எழுதிவிடுகிறார்கள். தெய்வம் (நேர்நேர்) தேமாச்சீர் ஆகும். இப்படி வருதல் பிழை. குற்றியலுகர "யதி' வழு வராமலும் எழுத வேண்டும். "அன்பு அகத்திருக்க ஆர்வம் பெருகி வர' என்று வெண்பாவின் முதலடி அமைக்கிறார் ஒருவர். அன்பு இதில் உள்ள உகரம் கெடும். அன் பகத்திருக்க - முதற்சீர் ஓரசையாய் நின்று யாப்பு அழிந்தது. அன்ப கத்திருக்க என்று சிலர் பிரித்தாலும் யாப்பு சிதைகிறது. இத்தகைய இடையூறு நேராதவாறு சொற்களை ஆள வேண்டும்.